Tuesday, 10 March 2026

நன்றி உணர்வு - சோம நாகலிங்கம்

நன்றி உணர்வு 

நன்றி உணர்வு என்றால் என்ன? 

ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாம். கூண்டில் அடைபட்ட ஒரு புலியை பார்த்து இறக்கப்பட்டு ஒரு மனிதன் அதை கூண்டை விட்டு வெளியே வர உதவுகின்றான். அந்த புளியோ வெளிய வந்தவுடன் அந்த மனிதனை சாப்பிட ஆசைப்படுகின்றது. மனிதன் புலியிடம் கேட்கிறான் நான் செஞ்ச உதவிய நீ எப்படி மறக்கலாம். இவர் செய்த உதவிகளை எப்ப ஞாபகம் வச்சுக்கணும் இல்லையா என்று கேட்கின்றான். அதற்கு அந்த புலி அப்படி ஒன்றும் இல்லை என்கின்றது. 

இவர்கள் பிரச்சனையை அந்த வழியை வந்த ஒரு நாயிடம் கூறுகின்றார்கள்.  அந்த நாயோ, புலி தான் சரி. நான் காலம் காலமாக எனது மாஸ்டருக்கு உதவியாக இருந்தேன். ஆனால் எனக்கு வயதானவுடன் அவன் இந்த காட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். ஆகையால் முன்னர் செய்த உதவிகளுக்கு என்றும் மதிப்பில்லை என்கின்றது அது. 

மனிதன் புலியிடம் இன்னொருவரிடம் கேட்போம் என்று கெஞ்சுகின்றான். அங்கு வந்த குதிரையிடம் அவர்கள் பிரச்சினையை சொன்ன பொழுது நாய் சொன்னதையே குதிரையும் சொன்னது. 

இப்பொழுது மனிதன் கெஞ்சுகின்றான் மூன்றாவது ஒருவரிடம் கேட்போம் என்கின்றான். சம்மதித்து அந்த வழியில் வந்த நரியிடம் கேட்கின்றது. நரி எனக்கு ஒன்றும் புரியவில்லை நீங்கள் முதலில் இருந்து என்ன நடந்தது என்று நடித்துக் காண்பியுங்கள் அப்பொழுது நான் சொல்கின்றேன் என்றது. உடனே புலியும் கூண்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது நரி வேகமாக பாய்ந்து கதவை மூடிவிட்டது. அது மனிதனிடம் உன்னை நான் காப்பாற்றி விட்டேன் நீ பதிலுக்கு எனக்கு என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கின்றது. நரிக்கெல்லாம் நான் என்ன திரும்ப செய்யணும் என்று சொன்ன மனிதன் அந்த நரியை விரட்டி விடுகின்றான். 

இந்த கதையை கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? 
1. நமக்குச் செய்யும் உதவிகளை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் 
2. நமது உறவுகளுக்கு தவறான நோக்கம் அடிப்படையாக இருந்து விடக்கூடாது 
3. நமது தேவைகள் நிறைவேறிவிட்டால் நமக்குச் செய்யப்பட்ட உதவிகளை மறப்பது நமது வழக்கம். 
இதில் எந்த பதில் உங்களுக்கு பொருத்தமாக தோன்றுகின்றது. உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களை இப்படி ஏமாற்றி இருந்தால் அது சுவைபட இருக்குமானால் இங்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். 

இப்பொழுது நாம் நன்றி உணர்வை பற்றிப் பார்ப்போம்

ஒரு விஷயத்தையோ ஒரு மனிதரையோ பாராட்ட வேண்டும் என்று தோன்றினால் அல்லது நாம் அதற்காக அல்லது அவருக்காக நன்றியுடன் இருந்தால் அதுதான் நன்றி உணர்வு 

இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1.நமக்கு கிடைத்தவற்றிற்கு, நம்மிடம் இருப்பவைகளுக்கு நன்றியுடன் இருப்பது
2.வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை அடையாளம் காணுதல் மற்றும் பாராட்டுதல்
3.பிறரிடம் இருந்து வெளிப்படும் கருணை மற்றும் பரிவினை அடையாளம் காணுதல்
4.நன்றியையும் பாராட்டையும் வெளிப்படையாகத் தெரிவித்தல்

இந்த நொடியில் அதுவும் விடிகாலை 6:00 மணிக்கு நீங்கள் யாருக்கு அல்லது எதற்கு நன்றிக் கடன் பட்டதாகத் தோன்றுகின்றது?
1.உங்கள் குடும்பம் 
2.உங்களின் நல்ல உடல் நலம் 
3.உங்களுக்கு உதவும் சக ஊழியர் 
4.காலையில் காதலுடன் காபி கொடுத்த மனைவி 
5.கைவசம் உங்களுக்கு இருக்கும் வேலை மற்றும் தொழில்

மேலே குறிப்பிட்ட ஐந்து விஷயங்களில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன காரணம் என்று குறிப்பிடுங்கள்.

நன்றி உணர்வின் சக்தி 
1.உங்களை மகிழ்ச்சியாக வைக்கின்றது 
2.உங்களது ஸ்ட்ரெஸ் குறைகின்றது
3.உங்கள் உறவுகள் மேம்படுகின்றன
4.உங்களின் நேர்மறை சிந்தனையை கட்டமைக்கின்றது
5.உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது
6.வளமான வாழ்க்கையை உருவாக்கித் தருகின்றது

இதைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு யாரைப் பாராட்டத் தோன்றுகிறது? இதில் உண்மை என்னவென்றால் நீங்கள் எந்த அளவிற்கு வாழ்க்கையை பாராட்டுகின்றீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையும் நீங்கள் பாராட்டுவதற்கான விஷயங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

நன்றி உணர்வின் பரிமாணங்கள் 

1.பிறருக்கு நன்றியுடன் இருப்பது 
நம்மை பெற்றெடுத்த பெற்றோர், நமக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் குருநாதர்கள், அப்போ பொழுது உதவி செய்த சக ஊழியர்கள், நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நமக்கு கொடுக்கும் (பணம் கொடுத்தால் தான்) வென்டார்கள் என்ன நமது நன்றிக்குரியவர்கள் பலர். இவர்களால் நமது வாழ்வு மேம்பட்டு இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. 
2.நமக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி
நமக்கு கிடைத்த கல்வி, நாம் போராடி பெற்ற வேலை, வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், நமது வெற்றிகளின் படிக்கட்டுகளாக இருக்கும் நாம் கண்ட தோல்விகள் என நமது நன்றி கூறிய விஷயங்கள் பல பல. 
3.அன்றாட வாழ்க்கையில் நன்றிக்குரிய அம்சங்கள்
நமது உடல் ஆரோக்கியம், நமக்கு கிடைக்கும் சரிவிகித உணவு, நம்மை ஆற்றுப்படுத்தும் அல்லது அமைதிப்படுத்தும் இயற்கை, நமது நன்றிக்குரிய நேரம் என்று அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்கள் நமது நன்றிக்குரியவைகளாக மாறுகின்றன.

பலர் தமது நன்றியை வெளிப்படுத்த வெற்றிக்காக காத்திருப்பர். ஆனால் வெற்றிகரமான மனிதர்கள் முதல் காரியமாக தமது நன்றியை உணர்வர்.

உங்கள் வாழ்க்கைக்கு பங்களித்த ஒரு பத்து பேரை நினைவு கூரவும். அதுமட்டுமல்ல கடைசியாக அவர்களுக்கு எப்பொழுது நீங்கள் நன்றி தெரிவித்தீர்கள். 

4.75 கிலோ எடையுடன் கிட்டத்தட்ட 56 டோல் வலியுடன் அதாவது 20 எலும்புகளை ஒரே நேரத்தில் உடைத்தால் என்ன வலி வலிக்குமோ அந்த அளவு வலியுடன் என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கு நான் மிகுந்த நன்றி கடன் பட்டிருக்கின்றேன். ஆனால் அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன் என்றால் இல்லை என்பது தான் எனது பதில். என் தாய் முதலில் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னபொழுது எனஆணாதிக்க மனோபாவம் என்னை நம்ப விடவில்லை. பெண்கள் என்றால் சற்று கூட்டிக் குறைத்துத் தான் பேசுவார்கள் என்ற என்னுடைய தவறான கண்ணோட்டம் எனது நன்றி உணர்வைப் பாதித்துவிட்டது. எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் இந்த வலி பற்றிய செய்தியை நான் படித்தது என் தாயார் இறந்ததற்கு பின்னால் தான். அதுமட்டுமல்ல எனக்காக அதே அளவு எடையுடைய இரண்டாவது மகனை பெற்றுக் கொடுத்த எனது மனைவி இறந்த பின்னர் தான் இந்த செய்தியை பற்றி படித்தேன். 

இன்றளவும் அந்த இருவருக்கும் எனது நன்றி உணர்வை நான் தெரிவிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இருக்கின்றது.

அவர்களைப் பற்றிய நன்றி உணர்வு இப்பொழுது மிகுந்து இருந்தாலும் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை என்ற வருத்தம் தான் தொக்கி நிற்கின்றது. 

நன்றி உணர்வு அறிவியல் பூர்வமாக என்ன சொல்கின்றது. நன்றி உணர்வு மிகுந்தால் நேர்மறை உணர்வுகள் உங்களை ஆக்கிரமிக்கும். அது உங்கள் மூளையிலிருந்து டோபோமைன் என்ற வேதிப்பொருளை சுரக்க வைக்கும். அதனால் உங்கள் வலி அகன்று மகிழ்ச்சியாக உணர்வீர்கள். 

உண்மையான நன்றி உணர்வு நமக்கு எது கிடைக்கவில்லை என்பதில் கவனத்தை செலுத்துவதை விட எது இப்பொழுது கைவசம் இருக்கின்றது என்பதை பற்றிய கவனம் செலுத்த வைக்கின்றது. 
இப்படி ஒரு மனோபாவம் அமைந்துவிட்டால் தங்களது மனைவிகளை ஒருபோதும் பாராட்டாத கணவன்மார்கள் தங்களது இணையர்கள் பாராட்டும் அளவிற்கு, அல்லது மகிழும் அளவிற்கு தினமும் பாராட்டி மகிழ்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இது மட்டுமல்ல அது எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. நமக்கு தேவையான உணவுப்பொருட்களை இன்னும் பல விஷயங்களை நமக்கு கொடுக்கும் கடைக்காரர்களுக்கு பொருட்களை வாங்கி முடித்தவுடன் இன்றைய பொழுது நன்றாக இருக்கட்டும் என்று கூறுவது என்னுடைய வழக்கம். நூற்றுக்கு 90 பேர் அதைக் கேட்டு மகிழ்வார்கள். சிலர் என்ன நன்றாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்வார்கள்.
 ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு சமயம் ஒரு பழக்கடைக்காரருடன் பழத்திற்கு இரண்டு ரூபாய் விலை குறைப்பதில் சிறிது சண்டை. அவர் கறாராக விலை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டார். 
பணம் வாங்கி முடிந்தவுடன் என் பெயர்த்தி நான் சொல்கின்றேன் என்று அவரிடம் இன்றைய பொழுது நன்றாக இருக்கட்டும் என்று கூறினாள். கோபத்தில் இருந்த அவர் அதை சரியாக கவனிக்கவில்லை ஆனால் சிறிய குழந்தை ஏதோ சொல்கின்றதே என்பதைப் பார்த்து விட்டார். அதனால் அவளிடம் என்ன பாப்பா சொன்னாய் என்று கேட்டார். இவ்வளவு மிகவும் பொறுமையாக இல்லை தாத்தா இன்றைய பொழுது உங்களுக்கு நன்றாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றாள். இரண்டு ரூபாய் விலை குறைப்பதற்கு போராடிய அந்தப் பெரிய மனிதர் அந்தக் குழந்தையிடம் பத்து ரூபாய் பழத்தை எடுத்துக் கொடுத்து விட்டார். அதுதான் அந்தக் குழந்தைக்கான அவரது நன்றி உணர்வு.

குற்றச்சாட்டும் நன்றி உணர்வும் 

ஏகப்பட்ட வேலை இருக்கு எனக்கு 

நான் வளர்வதற்கு இவ்வளவு வாய்ப்புகள் இருப்பதால் நான் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன் 

எனது முதலாளி மிகவும் கடுமையானவர் 

எனது வளர்ச்சிக்காக என் முதலாளி என்னை உந்தித் தள்ளுகின்றார்.

என் வாழ்க்கைப் பாதை ரோஜாப் பூக்கள் அடங்கியது அல்ல, முள் பாதை. ஆனால் இந்தச் சவால்கள் என்னைப் புடம் போடுகின்றன.

இருப்பதைக் வைத்து கொண்டாடுங்கள் 

பல வேத நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன. ஆனாலும் வாலி பாராட்டிய கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் எனது நினைவிற்கு வருகின்றது. 
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா என்ற பாடலில் வரும் முக்கியமான உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்ற வரிகள், இருப்பதைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

உங்கள் அறையின் ஒரு மூலையில் அமர்ந்து, விளக்குகளை அணைத்துவிட்டு, அலைபேசியைத் தூர வைத்து விட்டுக் கண்களை மூடி நீங்கள் பிறந்ததிலிருந்து இன்று வரை நடந்த நல்ல விஷயங்கள், கடந்து வந்த நன்றிக்குரிய மனிதர்கள் என்று மனக்கண் முன் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி மனதார நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் பெற்றோர்களாக இருக்கலாம், ஆசிரியப் பெருமக்களாக இருக்கலாம், உங்கள் வழிகாட்டிகளாக இருக்கலாம், சக ஊழியர்களாக இருக்கலாம், அன்றாடம் நீங்கள் சந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கலாம். நன்றி உணர்வு பெருக்கிட கண்களை மூடி அவர்களை மன கண்ணில் பார்த்து மெல்ல அந்தந்த நிகழ்வுகளை அசை போடுங்கள்.
என்ன இவைகள் எல்லாம் நினைவூட்டிய எனக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றதா? 

 

நமது நன்றி உணர்வை எது தடை செய்கின்றது 
1.ஒப்பிட்டு நோக்குதல். இன்றைய சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவை இயற்கையாகவே நமது பாராட்டு மனோபாவத்தை குறைக்கின்றன என்றால் மிகையாகாது 
2.எதிர்பார்ப்புகள்
இல்லாததை நினைத்து அதை நோக்கிய கவனம் நம்மை பாதாள கூலிக்கு இழுத்துச் சென்று விடும்.
3.பாரபட்ச மனோபாவம்
மனித மூளை விசித்திரமானது. தனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை கொண்டாடாமல் பிரச்சனைகளை மட்டுமே நினைவு கூர்கின்றது.

நன்றிக் கடிதம் எழுதுதல் 
எந்த அளவிற்கு உங்களுக்கு பிறர் உதவியாக இருக்கின்றார்கள் என்பதைக் குறித்து அவர்களுக்கு உங்கள் நன்றியை வெளிப்படையாகத் தெரிவிக்கவும். எந்த விதத்தில் அவர்கள் உதவியாக இருந்தார்கள், என்ன விஷயங்களை எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ள வழி காட்டினார்கள், எப்பொழுதும் எப்படி உதவியாக இருந்தார்கள்  என்பதற்கான உங்கள் நன்றி உணர்வுகளை ஒரு கடிதம் மூலம் எழுதி குறிப்பிட்ட நபருக்கு அனுப்பினால் நீங்களும் மகிழ்வீர்கள். அவரும் மகிழ்வார். (அவருக்கும் டோபோர்மேன் சுரக்கும் அல்லவா) 

புதிய பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள் 
இரவு படுக்கப் போகும் பொழுது உங்கள் நன்றி கூறிய மூன்று விஷயங்களை உங்கள் டைரியில் எழுதுங்கள். 
நீங்கள் பாராட்ட விரும்பும் ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிடுங்கள். 
இன்று என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள் என்பதையும் எழுதுங்கள். இதற்கு என்ன இரண்டு நிமிடங்கள் ஆகுமா?
 
ஆக நண்பர்களே உங்களிடம் இருப்பவற்றை, அதாவது உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களைக் கொண்டாடுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டு நோக்காதீர்கள். கிடைத்த நேரம் எல்லாம் பிறரைப் பாராட்டுங்கள். பிறருக்கு உதவி செய்யுங்கள். உங்களது நன்றி உணர்வு மேலும் பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரட்டும் என வாழ்த்துகின்றேன். 
சோம.நாகலிங்கம் இ.வ.ப(பணி ஓய்வு) 
நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்,
நிகில் அறக்கட்டளை

Thursday, 5 March 2026

தாய் கிழவி

தாய் கிழவி 
ஒரு கலையரசி ராதிகாவின் ஆகச்சிறந்த திரைப்படம் தாய்க்கிழவி.  பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தனது ஆங்காரமான அட்டகாசமான நடிப்பால் பதிலடி கொடுக்கும் பவுனுத்தாய் , அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக பவுனுத்தாயாகவே ராதிகா வாழ்ந்திருப்பது அற்புதம் .

ஒரு பாத்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்து பெண்களாலும் நடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ராதிகாவின் நடிப்பு கோலோச்சுகிறது. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் ? யார் கையையும் எதிர்பார்க்காமல் அவள் பொருளாதாரத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று உரைக்கும் படம். ஒரு பெண் தனித்து வாழும் பொழுது தனது குழந்தைத்தனங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தனக்கான ஒரு முகமூடி அணிந்து அவள் ஒரு கம்பீரமான அடங்காப்பிடாரியாக அனைவருக்கும் முன் காட்சியளிக்கும் போதும், ஒரு குழந்தை தனத்துடன் சிறுவர்களுக்கான கண்ணாடி அணிந்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டு, திரைப்படம் பார்த்து ஜிகிர்தண்டா குடித்து தனக்கான விருப்பங்களை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாக வாழ்ந்து காட்டி உள்ளார்.  தனது சுதந்திரம், ஆசைகள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு குடும்பத்தினருக்காக வாழ்கின்ற பெண்ணே  சிறந்த பெண் என்று கற்பிக்கப்பட்ட சமூகத்தில் ,என் காசு என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று சொல்வதற்கு  ஒரு துணிச்சல் பெண்ணுக்குத் தேவைப்படுகிறது .இந்தக் காலத்தில் வேலைக்கு போகும் ஒரு பெண் நான் சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் கூட குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழலில் தாய்க்கிழவி, தாய் வழிச் சமூகத்தின் அடையாளமாக திகழ்கிறார். படத்தின் வசனம் ஒவ்வொன்றும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியதாக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது .திரைக்கதை பின்னணி இசை, ஸ்கிரிப்ட் , ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பு.
ஒவ்வொருவரும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பது படத்தில் வெற்றிக்கு அடி கோள்கிறது. தெறிக்கும் வசனங்கள்.
 படம் முடிந்து வெளியே வரும் பொழுது ராதிகாவின் அட்டகாசமான நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கூறிக்கொண்டு வெளியேறுவதை காண முடிந்தது. ஒரு பெண் கம்பீரமாக தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதற்கு உதாரணம்தான் பவுனுத்தாய். தனது மகள் இரண்டாம் திருமணத்தின் பொழுது தாலி கட்டும் பொழுது நிமிர்ந்து தாலியை வாங்கு என்று கூறுவதன் மூலம் பெண்ணுக்கு எதிரான அநியாயங்களுக்கு பெண்கள் தலை நிமிர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் பவுனுத்தாய் . "பத்து தலைமுறையாக படிக்க முடியாம இப்பதான் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு விட்டால் படிச்சிடு"
"60 வயசுல எனக்கு கிடைச்ச சுதந்திரம் 30 வயசுல என் மகளுக்கு கிடைச்ச சுதந்திரம் என் பேத்திக்கு 15 வயசுல கிடைச்ச சுதந்திரம் அவ மகள் பிறக்கும் போதே சுதந்திரமா பொறப்பா"

யாருப்பா திரைக்கதை வசனம் கையை கொடுங்கப்பா ...

சிவகார்த்திகேயன் கூட்டணிக்கு ஒரு ராயல் சல்யூட்.

எல்லோருக்குள்ளும் ஒரு பவுனுத் தாய் வாழ்கிறாள் அதனால் இந்த உலகம் வாழ்கிறது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

Monday, 19 January 2026

வீதி ஜனவரி 2026

இதயங்கள் சங்கமிக்கும்
புதுக்கோட்டை  'வீதி': 
கவிதூவிய கண்ணீரும், 
கரைபுரண்ட அன்பும்..!
*************************

​புதுக்கோட்டையின் மண் வாசனைக்கும், அதன் இலக்கியச் செழுமைக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் எப்போதும்
உண்டு. அந்த அடையாளத்தின் முகவரியாகத் திகழ்வது 'வீதி' இலக்கிய அமைப்பு.

 எளிமையைப் போர்த்திக்கொண்டு, இனிமையான இலக்கியப் பகிர்வுகளால் எழுத்தாளுமைகளை ஒன்றிணைக்கும் இந்த மகத்தான அமைப்பின் 140-வது மாதாந்திரச் சந்திப்பு, இன்று (19-01-2026) திங்கட்கிழமை, புதுக்கோட்டையின் மாலைப் பொழுதை இலக்கியச் சாரலில் நனைத்தது.

​விஜய் பேலஸ் பின்புறம் உள்ள ஆலிப் கல்யாண பிரியாணி உணவகக் கடை மாடியில், குளிரூட்டப்பட்ட அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் இதயங்கள் மட்டும் தமிழால் தகித்துக்கொண்டிருந்தன.

​நிகழ்வின் வாசலைத் திறந்து வைத்து கவிஞர் மலையப்பன் வரவேற்புரை ஆற்ற, கவிஞர் மு.கீதா தேவதா தமிழ் கீதா  தலைமையேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார்.

 கவிஞர் தங்கம் மூர்த்தி  Thangam Moorthy தனது தொடக்க உரையின் மூலம் தனக்கே உரிய பாணியில் இலக்கிய  தீபத்தை தனது அனுபவ வெளிச்சங்களால்  அழகாய் ஏற்றி  வைத்தார்.

 மேடையில் கவிஞர்கள் கா.மாலதி, Malathikalimuthu  முனைவர் மகா சுந்தர், Mahaa Sundar  கீதாஞ்சலி  ஆகியோர் தங்களின் சொற்களால் கவிதை மழை பொழிய, கவிஞர் மைதிலி Mythily S  மாண்ட்டோ கதைகளின் வாசிப்பு அனுபவத்தை ஒரு காட்சிக் காவியமாகவே கண்முன் நிறுத்தினார்.

 கவிஞர் கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan , ‘பராசக்தி’ திரைப்படத்தின் மொழிப் போராட்ட  உணர்வை இன்றைய படைப்புச் சூழலோடு பொருத்தி விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்தினார்.

​ஆனால், இன்றைய மாலைப் பொழுது வீதியின் வழக்கமான கூட்டங்களைக் கடந்து, உணர்ச்சிகளின் சங்கமமாக மாறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அவர் – அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து ஓடி வந்திருக்கும் அன்பின் நதி, கவிஞர் கிரேஸ் பிரதிபா.

​கொடைக்கானலில் பிறந்து, பெங்களூரில் இல்லறம் கண்டு, இன்று அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்தாலும், கிரேஸின் இதயம் எப்போதும் தமிழ் இலக்கியத்தில்தான் துடித்துக்கொண்டிருக்கிறது.

 புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நிதி உதவி செய்ததோடு, தற்போது சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரிய பணியையும்  செய்து வருகிறார்.

பல்லாண்டுகளுக்கு முன்பாக ​மதுரையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் துளிர்த்த அந்தச் சிறு நட்பு, இன்று 'வீதி' அமைப்பின் ஒரு அங்கமாக, ஒரு உடன்பிறந்த சகோதரியாக, உற்ற தோழியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 "புதுக்கோட்டைதான் எனக்குப் புத்துயிர் தருகிறது" என்று அவர் மேடையில் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த காற்று கூட கனத்துப் போனது.

​"இந்த வீதி நண்பர்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? எங்கு இருந்தாலும் உங்கள் அன்பை  நான் மறக்கமாட்டேன்..." ​என்று அவர் தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கண்கள் கசிந்து விம்மிய அந்தத் தருணம், அங்கிருந்த ஒவ்வொருவரையும் கலங்க வைத்தது. நெஞ்சம் நெகிழ வைத்தது.
ஒரு வார்த்தைகூட ஆங்கிலக்  கலப்பில்லாமல் அன்பின் அழகிய தமிழ் மொழியை பகிர்ந்து கொண்டு, சிரம் தாழ்த்தி அவர் நன்றி செலுத்திய மேடைப் பண்பாடு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

எழுத்தால் இணைந்த உறவுகள், இரத்த உறவுகளையும் தாண்டி எவ்வளவு ஆழமானவை என்பதற்கு கிரேஸின் அந்தப் புனிதமான கண்ணீர்த்துளிகளே சாட்சி.

​நிகழ்வின் நிறைவாகப் பேசிய கவிஞர் நா முத்துநிலவன்   கிரேஸ் பிரதிபாவின் சங்கத் தமிழ் போன்ற தூய்மையான அன்பைப் பாராட்டிப் பேசினார். சங்க இலக்கியப் பாடல்களைச் சான்றுகாட்டி, அடர்த்தியான அன்பின், தூய தோழமையின் அந்த உன்னதப் பிணைப்பை அவர் விவரித்தபோது, இலக்கியம் எப்படி மனிதர்களை ஈரமான இதயங்களால் பிணைக்கிறது என்பது மீண்டும் நிரூபணமானது.

​நிகழ்வில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சொக்கலிங்கம், புலவர் கும.திருப்பதி திருப்பதி குமரப்பன் , அசோகன் (எல்.ஐ.சி),எழுத்தாளர் ​அண்டனூர் சுரா Andanoor Sura ,கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,
​கவிஞர்  ஒட்டடை பாலச்சந்திரன் 
​கவிஞர் சோலச்சி Solachy Pudukkottai , கவிஞர் ரேவதி ராம்
​கவிஞர் பாஸ்கர் கோபால் 
​வழக்குரைஞர் சங்கீதா Sangeetha R விதைக்கலாம் அமைப்பின் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக 'விதைக்கலாம்' பாலாஜி நன்றியுரை கூற, ஒரு இனிய அன்பின் ஈரம் கலந்த இலக்கிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

​'வீதி'-யில் விழுந்து, நம் இதயங்களில் நுழைந்து, உறவில் கலந்த உயிராய் மாறிவிட்ட கவிஞர் கிரேஸ் பிரதிபா அவர்களே...உங்கள் அன்பு என்றும் எங்களைச் சூழும்..! இந்தப் புதுகையின்  தோழமை உங்களோடு என்றும் துணை நிற்கும்..!
வீதி'யில் பூத்த இந்த நட்பு, கடல் கடந்தும் புதுக்கோட்டை மண்ணின் ஈரத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 

வாழ்க வீதி..!
 வளர்க தமிழ் நட்பு..!

-பழ.அசோக்குமார்

Saturday, 17 January 2026

பெரியார் குறித்து பெருஞ்சித்திரனார்

அவர் பேசிய பேச்சுகளை 
ஏதென்சு நகரைச் சுற்றிவந்த 
சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது.  

உலகப் பெரும் பேச்சாளர் 
என்று பெயரெடுத்த மெகசுதனிசும்
 பேசியிருக்க முடியாது.  

அவர் சுற்றிய தொலைவைக்
 கிரேக்க மன்னன் அலெக்சாண்டரும்
 சுற்றியிருக்க முடியாது.  

அவர் பிரெஞ்சு மாமறவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர். 

 உருசிய இலெனினைவிடப்
 பொதுமக்களை நேருக்கு நேராகக்
 கண்டு பேசியவர்.

 குருசேத்திரப் பாரதப் போரைவிட
 ஆரியத்தின் மேல் அவர் தொடுத்த போர்
 மிகப் பெரியது. 
 கடுமையானது. 

 வேறு எவரும் தொடுக்க அஞ்சியது. 
 நினைத்துத் தொடை நடுங்கியது"

பெரியார் குறித்து
 பாவலரேறு பெருஞ்சித்திரனார் -
 1971இல் எழுதியது.

Sirpi Rajan முகநூல் பதிவு