Sunday, 3 May 2026

ai wonder செயற்கை நுண்ணறிவு அற்புதம்

முகநூல் பகிர்வு
குப்புசாமி அவர்களின் பதிவு

எனக்குப் பியானோ வாசிக்கத் தெரியாது. ஆனால் வாசிக்க ஆசை. என்ன செய்யலாம்? சில ஆண்டுகளாவது பயிலவேண்டும். இன்ஸ்டண்ட் காஃபி போல உடனே வாசிக்க வழி உள்ளதா?

மந்திரத்தில் மாங்காய் போலத் தெரிகிறதா? அறிவியல் தான். இதற்கும் ஏஐ துணைசெய்கிறது. 

'ஹ்யூமன் ஆபரேட்டர்' என்றொரு புராஜெக்ட். மனித இயக்கி என்று மொழியாக்கம் செய்யலாம். வேண்டாம். இது 'மனிதர்களை இயக்கும்' ஏஐ. சரியாக வாசித்தீர்களா? மனிதர்கள் இயக்கும் ஏஐ அல்ல. மனிதர்களை இயக்கும். 

விளக்கமாகப் பார்ப்போம். 

MIT (Massachusetts Institute of Technology) கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் தலையாய கல்வி நிறுவனங்களில் ஒன்று. இவர்கள் ஒரு ஹேக்கத்தான் நடத்தியுள்ளனர். அதன் பெயர் MIT Hard Mode 2026. 

இதில் பங்குபெற்ற ஒரு குழு வடிவமைத்தது தான் 'ஹ்யூமன் ஆபரேட்டர்'. இந்த ஏஐயால் நம்முடைய கைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நாம் பயின்றிராத பல்வேறு செயல்களைச் செய்ய முடியும். 

இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்கிறேன். உங்களுக்குப் படம் வரையத் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண் முன்னே இருக்கும் ஒன்றை நீங்கள் வரைய விரும்புகிறீர்கள். 

முதலில் இந்த ஏஐயை அணிந்துகொள்ளவேண்டும். பின்னர் நான் இதை வரைய விரும்புகிறேன் என்று கூறவேண்டும். அவ்வளவு தான். 

அதன் பின் ஏஐயின் மாயம் தொடங்கும். உங்களுடைய கை தானாகவே இயங்கத் தொடங்கும். விரல்கள் நளினமாக நகரும். நீங்கள் வரைய நினைத்ததை வரைந்து முடிக்கும். 

இது போலத் தான் நான் தொடக்கத்தில் சொன்ன பியானோ கதையும். நீங்கள் விரும்பும் மெலடியை பியானோவில் வாசிக்கலாம். அதற்கான கீகளைத் தேடி உங்கள் விரல்கள் செல்லும். உங்கள் கட்டளையில்லாமலேயே. 

இதனை டெமோ செய்து காட்டியுள்ளனர். அதற்கான வீடியோவும் உள்ளது. ஆர்வலர்கள் கண்டடையவும். 

மந்திரத்தில் மாங்காய் எப்படிக் காய்க்கிறது?

இத்தொழில்நுட்பத்தின் மையத்தில் உள்ளது கிளாட். இவர் தான் மூளை. பார்ப்பதற்குக் கேமிரா. கேட்பதற்கு மைக்ரோஃபோன்கள். 

அதெல்லாம் சரி. கைகள் எவ்வாறு நகர்கின்றன? இதற்கு 'எலெக்ட்ரிகல் மஸில் ஸ்டிமுலேஷன்' என்றொரு நுட்பம். இதன் மூலம் குறிப்பிட்ட தசைகளுக்குக் கட்டளையிட முடியும் என்கிறார்கள். 

இது தான் மொத்த அசெம்ப்ளி. என்ன தேவை என்பதை கேமிரா மூலம் அறிகிறது. அல்லது மைக்ரோஃபோன் மூலம். பின்னர் கிளாடானாரைத் தொடர்புகொள்கிறது. அவர் இதற்காக எந்தெந்தத் தசைகளுக்கு என்னென்ன கட்டளைகள் என்பதை முடிவு செய்கிறார். அதை நம் விரல்கள் செய்துமுடிக்கின்றன. 

நம்ப முடியவில்லை தானே. வீடியோ பார்க்கும்வரை நானும் நம்பவில்லை. ஆனால் இது ஏதோ வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் அல்ல. MIT போன்ற கல்விநிறுவனம் சாட்சி சொல்கிறது. ஆமாம் இவ்வாறு தான் நிகழ்கிறது என்கிறார்கள். 

இதை நிகழ்த்திக்காட்டிய குழுவில் ஆறு நபர்கள். தாங்கள் புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. இருக்கும் தொழில்நுட்பங்களை ஒரு புதிய விதத்தில் இணைத்துள்ளோம். அதன் பயன் தான் இந்த ஹ்யூமன் ஆபரேட்டர். 

இப்போதைக்கு இது ஒரு புராடெக்டாக வரவில்லை.  கூடியவிரைவில் வரலாம். இன்றைய சூழலில் இதன் மூலம் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு எல்லைகள் உள்ளன. விரைவில் இவ்வெல்லை பெரிதாகலாம். எல்லாமே முடியும் என்றொரு நாள் விரைவில் வரலாம்.  

மனிதர்கள் கம்ப்யூட்டர்களோடு உரையாடும் முறைகள் காலந்தோறும் மாறிவந்துள்ளன. காமாண்ட் ப்ராம்ப்ட் காலத்திலிருந்து இன்றைய கிளாட் காலம். இன்னும் மாறும். அதன் மூலம் இதுகாறும் நாம் சிந்தித்திராத புதிய வகைக் கருவிகள் வரும்.

நண்பர்களே, இன்று வாத்தியார் சுஜாதாவின் பிறந்த நாள். இந்த ஹ்யூமன் ஆபரேட்டரை, அவர் காலத்தில் எழுதியிருந்தால் சயின்ஸ் ஃபிக்ஷன். ஆனால் இன்று இது தொழில்நுட்பம். நிஜம். 

ஏஐ தழைத்தோங்கி நிற்கும் இக்காலத்தில் சுஜாதா இருந்திருக்கவேண்டும். எப்படியெல்லாம் அதோடு விளையாடியிருப்பார் என்று எண்ணிப்பார்ப்பதே பரவசமாக உள்ளது. 

இந்தக் கட்டுரையை அவர் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதையும் கிளாடானாரிடம் கேட்கலாம். அவருடைய வெர்ஷன் என்று ஒன்றைக்கொடுக்கும். அவரிடம் அதைக் காட்டியிருந்தால் வாசித்துவிட்டு, 'நாட் பேட். குட் ட்ரை' என்று சொல்லிக் கூலாகக் கடந்திருப்பார்.

தமிழில் அறிவியல் கட்டுரைகளை, கதைகளை சுவைபட எழுதிய சுஜாதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வி மிஸ் யூ சார்.

soru


இன்று கிடைத்த இன்னும் ஒரு விருது...

கவிஞர், சிறுகதையாளர், இயற்கை ஆர்வலர், புகைப்பட ,கலைஞர், Sivakumar Ganesan அவர்களின் மதிப்புரை

*#சோறு_உணவு_அரசியல்
கட்டுரைகள்
கோ.லீலா
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

சமீபத்தில் முகநூலில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, நாட்டுக் கோழிக் குழம்பு நான் வைத்தது. சாதம் வீட்டம்மா வைத்தது என்று எழுதியிருந்தேன். அவை நாயகன் அய்யா,சாதமா?சோறா?என்று கேட்ட பிறகுதான் புரிந்தது.சாதம்தான் சார்.பழக்கத்தில் சோறாகி விட்டது என்று சொன்னேன். 

தொடர்ந்த நாட்களில்தான் சோறு உணவு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.

புத்தகத்தை,கோ.லீலா,குடும்பத்தின் அன்னபூரணியான தனது அம்மா சீதை கோவிந்தராஜலு அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.பொருத்தமான சமர்ப்பணம்.

சோறு என்ற சொல்லின் தொன்மை குறித்த கட்டுரை பிரமிப்பூட்டுகிறது.சாதம் உயர்திணையாகவும், சோறு தாழ்திணையாகவும் மாறிய அவலத்தைப் பேசுகிற இந்தக் கட்டுரையில் உள்ள தண்டச் சோறு என்பதைப் போல் தண்ட சாதம் என்கிற வசவு ஏன் இல்லை?என்ற கேள்விக்கான பதிலை யோசியுங்கள்.

இந்தியாவில் 2,00,000க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன என்ற தகவலும்,கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள 173 பாரம்பரிய அரிசிகளும், அவற்றின் பெயர்களும்,அவற்றின் மருத்துவக் குணங்களும், நாம் தொலைத்த அரும் பொக்கிஷங்களை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட வைக்கின்றன.

அரசர்களின் அரிசியான கருப்புக் கவுனி அரிசியின் நற் பயன்கள்,நாம் அலட்சியப்படுத்தும் மட்டை அரிசியின் சிறப்பு பற்றிய கட்டுரை சிறப்பு.

குழைவான நெல்லரிசிச் சோறுதான் அடிசில். இனிப்பான அக்காரவடிசலை அறிவேன்.நெய்யுடை அடிசில்,கொழும் துவை அடிசில்,ஊன் துவை அடிசில் என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு அடிசில்களை அறிந்து கொள்ள உதவுகிறது உணவு வகைகள் கட்டுரை. உண்டிக்கும், உணவுக்குமான வேறுபாடு ஆச்சர்யமானது.

அருந்துதல்,உண்ணல்,உறிஞ்சல் முதலான 26 வகையான உண்ணல் முறைகள்,உணவை வெறுமனே விழுங்கும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.உணவே மருந்தாக இருந்த பழந்தமிழரின் உணவு அறிவியல் வியப்பூட்டுகிறது.

உணவும் பெண்ணும்,இலக்கியத்தில் பெண்களின் உணவு கட்டுரைகள்,உணவுக்கும் பெண்ணுக்குமான இறுகிய பிணைப்பைப் பேசுகின்றன.

சைவ உணவு உயர்ந்தது,அசைவ உணவு கீழானது என்கிற மோசமான பொதுப்புத்தியின் மீது நுட்பமான தாக்குதலை நிகழ்த்துகிறது சைவமும் அசைவமும் கட்டுரை.தலித்துகளின் உணவில் மாட்டிறைச்சியும், பன்றியிறைச்சியும் முக்கிய அங்கம் வகிப்பதற்கு,உயர் வகுப்பினர் வேண்டாமென ஒதுக்கிய மலிவான உணவு என்பதுதான் காரணம் என்கிற தீபா பல்கின்ஸ் தக்கின் கருத்து சிந்திக்க வைக்கிறது.வட மாநில தலித்துகளிடையே ரக்தி என்னும் ரத்தப் பொறியல் ஏன் முக்கிய உணவாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலும் இதையே உறுதி செய்கிறது.

1830ல் க்விட்லட் என்ற ஜோதிடர் கிரகங்களை வைத்து மனித எடையை கணிக்க முடியுமா என்று அறிய B.M.I (Body Mass Index)ஐ உருவாக்கினார்.இன்று அதை டிவத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதர்களை எப்படியெல்லாம் அடிமையாக்கி வைத்திருக்கின்றனர் என்பதையும்,நம் அன்றாட உணவை கார்ப்ரேட்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதையும் தெளிவாகப் பேசுகிறது கார்ப்பரேட் கைப்பிடியில் உணவு கட்டுரை.

பகல்,இரவு கால மாற்றத்தை உணரும் சக்தி சிர்கேடியன் கடிகாரம்,வைட்டமின் டி சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது இப்படி ஆச்சர்யமான தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

தவளையின் மரணணு செலுத்தப்பட்ட தக்காளி,மீனோட மரபணு செலுத்தப்பட்ட ஸ்ட்ராபெரி என்று மரபணு மாற்றம் என்ற பெயரில் அடிக்கப்படுகிற அபாயமான கூத்துகளைப் பேசுகிறது மரபணு மாற்றம் கட்டுரை.

பிற நாடுகளின் மீது விதைகளை வைத்து தொடக்கப்படுகிற போர்களையும்,பூச்சிக் கொல்லி மருந்துகள் எவ்வாறு மனிதர்களின் ஆரோக்யத்தைச் சீர் குலைக்கின்றன என்பதையும் விரிவாகப் பேசும், பசுமைப் புரட்சியின் தீமைகள்,விதையென்னும் பேராயுதம் ஆகிய இரண்டும் முக்கியமான கட்டுரைகள்.

Globalization பற்றி அறிவீர்கள்.Glocalization பற்றி அறிவீர்களா?உணவு அரசியலின் எதிர்காலம் என்கிற முக்கியமான கட்டுரை,அதைத் தெளிவாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில்,மிக முக்கியமாக நான் கருதுவது,வெறுமனே பிரச்சனைகளையும்,அதன் தீமைகளையும் பற்றி மட்டும் பேசாமல்,அதற்கான தீர்வுகளையும் விரிவாகப் பேசுவதுதான்.

கட்டுரைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள், கவிஞர்கள் பிருந்தாசாரதி,பழனி பாரதி போன்றோரின் கவிதைகள்,கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் காட்சிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.

உணவுன்னா அதிரசம் தெரியும்,அதென்ன அரசியல்?போன்ற மெலிதான நகைச்சுவை ஊடாடும் நடையும்,உரையாடல் பாணியும் வாசிப்பவருக்கு எளிதில் நெருக்கமாகின்றன.

கோ.லீலா அவர்களின் கடும் உழைப்பும்,தீராத் தேடலும்,அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியன.

அட்டைப் படம் அழகு.நேர்த்தியான வடிவமைப்பு.

சாதமாகவும்,ரைஸாகவும் அறியப்படும் சோறு மற்றும் நாம் உண்ணும் அல்லது உண்ண வைக்கப்படும் உணவின் பின்னுள்ள அரசியலை மிகத் தெளிவாக, எளிமையாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவர்களுக்கு,அடுத்த வேளை உணவு உண்கையில்,புத்தகத்தின் ஏதாவதொரு வரி நிச்சயம் நினைவில் வரும்.