அசோகர் அளவுக்கு இலங்கையில் அதிக தாக்கம் செலுத்திய வேறு எந்த இந்திய மன்னரும் கிடையாது. பவுத்தம் என்ற மதம் இலங்கையில் பரவ மூலக்காரணமே அசோகர் தான் என்று எங்கள் வரலாறு நூற்களே சொல்லும் போது வேறு ஏதாவது விவாதத்திற்குற் போக முடியுமா?
ஆகவே அசோகரின் வரலாறை விரிவாக தெரிந்துக்கொள்ள தமிழ்நாட்டு எழுத்தாளர் Marudhan Gangadharan எழுதிய அசோகர் நூலை 2024 ஆம் ஆண்டு வாங்கினேன். ஒரு வகையில் அந்த நூல் பண்டைய இந்தியாவின் வரலாறையும் உள்ளடக்கியதாக இருந்தது. அந்த நூலில் அடிக்கடி ஒரு பெயர் வந்துக்கொண்டே இருந்தது அந்த பெயர் "ரோமிலா தாப்பர்" ஆணா பெண்ணா என்று கூட தெரியாது. ஆனால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போது தேட தொடங்கினேன் யார் இந்த ரொமிலா தாப்பர்? ஆச்சரியம் என்னவென்றால் அவர் எழுதிய "சோமநாதர்" நூல் என்னிடம் இருந்தது!
வரலாறு என்பது அரசர்களின் பெயர்களையும், போர் நடந்த ஆண்டுகளையும், அவர்கள் கட்டிய அரண்மனைகளையும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல அது சாதாரண மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களை உள்ளடக்கியது என்று இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்.
பழங்கால இந்திய வரலாற்றை (Ancient Indian History) காலனித்துவ பார்வையிலிருந்தும், அதீத தேசியவாதப் பார்வையிலிருந்தும் விடுவித்து, அறிவியல் மற்றும் தர்க்கரீதியாக அணுகிய இவரது பயணம் மிக மிகச் சுவாரஸ்யமானது.
1930-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி லக்னோவில் பிறந்த ரொமிலா தாப்பரின் குடும்பம் ஒரு ராணுவப் பின்னணியைக் கொண்டது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், லண்டனில் உள்ள புகழ்பெற்ற SOAS (School of Oriental and African Studies) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அங்கே அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புகழ்பெற்ற 'The Wonder That Was India' என்ற நூலை எழுதிய மாபெரும் வரலாற்றறிஞர் ஏ.எல். பாஷம். லண்டனில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய ரொமிலா, குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இணைந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கினார்.
ரொமிலா தாப்பருக்கு முன்பு வரை, இந்திய வரலாறு என்பது பெரும்பாலும் 'மன்னர்களின் வீரதீரச் செயல்களாகவே' எழுதப்பட்டு வந்தது. ஆனால் ரொமிலா தாப்பர், தொல்பொருள் ஆய்வுகள் (Archaeology), நாணயவியல் (Numismatics), மொழியியல் மற்றும் சமூகவியல் தரவுகளைப் பயன்படுத்தி வரலாற்றை எழுதத் தொடங்கினார்.
உதாரணமாக, மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்ததற்கு வெறும் அரசர்களின் பலவீனமோ அல்லது மதம் மட்டுமே காரணமல்ல. அது ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிர்வாகக் கோளாறுகளால் ஏற்பட்டது என்பதைத் தரவுகளுடன் நிறுவினார். அவரது புகழ்பெற்ற நூலான "Asoka and the Decline of the Mauryas" அசோகரை வெறும் ஒரு மதப் பிரச்சாரகராக மட்டும் பார்க்காமல், 'தம்மா' என்ற கொள்கையின் மூலம் ஒரு மாபெரும் பேரரசை ஒன்றிணைக்க நினைத்த ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரியாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அவரது ஆய்வுகளில் மிக முக்கியமானது குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற சோமநாதர் ஆலயம் குறித்த அவரது புத்தகம் (Somanatha: The Many Voices of a History). முகமது கஜினியின் படையெடுப்பால் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்டதை வைத்து, ஒட்டுமொத்த இந்து-முஸ்லிம் வரலாற்றையும் ஒரு 'பகைமை வரலாறாகவே' எழுதும் போக்கினை அவர் விமர்சித்தார்.
அந்தப் படையெடுப்பு நடந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுகள், சமணர்களின் குறிப்புகள், அரபுப் பயணிகளின் பதிவுகள் எனப் பல கோணங்களில் அந்த நிகழ்வை ஆராய்ந்தார். அரசர்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்கவே படையெடுத்தார்கள் என்பதையும், அதைத் தாண்டி அங்கு இரு சமூக மக்களுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கமும், வியாபாரத் தொடர்புகளும் இருந்ததை அந்த நூலில் அவர் தைரியமாகப் பதிவு செய்தார்.
ரொமிலா தாப்பரின் நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணம் உண்டு. இந்திய அரசு அவருக்கு 1992-ஆம் ஆண்டும், பின்னர் 2005-ஆம் ஆண்டும் (மன்மோகன் சிங் ஆட்சியில்) இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை அறிவித்தது.
ஆனால் அந்த இரண்டு முறையும் அவர் அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். "நான் ஒரு கல்வியாளர். எனக்கு விருதுகள் வழங்குவதாக இருந்தால், அது கல்வி நிறுவனங்களோ அல்லது அறிவுசார் அமைப்புகளோ வழங்கினால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். அரசாங்கம் வழங்கும் அரசு விருதுகளை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்" என்று கூறி இந்திய அரசையே திகைக்க வைத்தார். எனினும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலுக்கான நோபல் பரிசு என்று கருதப்படும் 'க்ளூக் பரிசு' (Kluge Prize - 2008) உட்பட சர்வதேச அளவில் பல மாபெரும் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
ரொமிலா தாப்பரின் முற்போக்கான, மதச்சார்பற்ற வரலாற்றுப் பார்வைக்காக அவர் வலதுசாரி அமைப்புகளாலும், இந்துத்துவா ஆதரவாளர்களாலும் இன்றுவரை மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அவரை ஒரு "மார்க்சிய வரலாற்றாசிரியர்" என்று முத்திரை குத்தி, சமூக வலைத்தளங்களில் பல அவதூறுகள் பரப்பப்பட்டன. 2019-ஆம் ஆண்டு JNU நிர்வாகம் அவரது தகுதியை மீண்டும் நிரூபிக்கச் சொல்லி அவரது CV-யை கேட்டது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இன்று 90 வயதைக் கடந்த நிலையிலும், ரொமிலா தாப்பர் சோர்வடையாமல் தொடர்ந்து வரலாற்றை எழுதிக் கொண்டும், சமகால அரசியல் குறித்து தைரியமாகக் குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்.
"வரலாறு என்பது நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி; அதைக் கட்டுக்கதைகளைக் கொண்டு நிரப்பக் கூடாது" என்று உரக்கச் சொல்லும் ரொமிலா தாப்பர், இந்திய அறிவுலகத்தின் ஒரு மாபெரும் சிங்கம் என்றால் அது மிகையாகாது!
- Abdullah Ibnu Naseer
#RomilaThapar #AncientIndia #IndianHistory #Ashoka #Historiography #HistoryAndPolitics #Abdullahibnunaseerwriteups
No comments:
Post a Comment