இன்று கிடைத்த இன்னும் ஒரு விருது...
கவிஞர், சிறுகதையாளர், இயற்கை ஆர்வலர், புகைப்பட ,கலைஞர், Sivakumar Ganesan அவர்களின் மதிப்புரை
*#சோறு_உணவு_அரசியல்
கட்டுரைகள்
கோ.லீலா
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350
சமீபத்தில் முகநூலில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, நாட்டுக் கோழிக் குழம்பு நான் வைத்தது. சாதம் வீட்டம்மா வைத்தது என்று எழுதியிருந்தேன். அவை நாயகன் அய்யா,சாதமா?சோறா?என்று கேட்ட பிறகுதான் புரிந்தது.சாதம்தான் சார்.பழக்கத்தில் சோறாகி விட்டது என்று சொன்னேன்.
தொடர்ந்த நாட்களில்தான் சோறு உணவு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.
புத்தகத்தை,கோ.லீலா,குடும்பத்தின் அன்னபூரணியான தனது அம்மா சீதை கோவிந்தராஜலு அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.பொருத்தமான சமர்ப்பணம்.
சோறு என்ற சொல்லின் தொன்மை குறித்த கட்டுரை பிரமிப்பூட்டுகிறது.சாதம் உயர்திணையாகவும், சோறு தாழ்திணையாகவும் மாறிய அவலத்தைப் பேசுகிற இந்தக் கட்டுரையில் உள்ள தண்டச் சோறு என்பதைப் போல் தண்ட சாதம் என்கிற வசவு ஏன் இல்லை?என்ற கேள்விக்கான பதிலை யோசியுங்கள்.
இந்தியாவில் 2,00,000க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன என்ற தகவலும்,கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள 173 பாரம்பரிய அரிசிகளும், அவற்றின் பெயர்களும்,அவற்றின் மருத்துவக் குணங்களும், நாம் தொலைத்த அரும் பொக்கிஷங்களை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட வைக்கின்றன.
அரசர்களின் அரிசியான கருப்புக் கவுனி அரிசியின் நற் பயன்கள்,நாம் அலட்சியப்படுத்தும் மட்டை அரிசியின் சிறப்பு பற்றிய கட்டுரை சிறப்பு.
குழைவான நெல்லரிசிச் சோறுதான் அடிசில். இனிப்பான அக்காரவடிசலை அறிவேன்.நெய்யுடை அடிசில்,கொழும் துவை அடிசில்,ஊன் துவை அடிசில் என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு அடிசில்களை அறிந்து கொள்ள உதவுகிறது உணவு வகைகள் கட்டுரை. உண்டிக்கும், உணவுக்குமான வேறுபாடு ஆச்சர்யமானது.
அருந்துதல்,உண்ணல்,உறிஞ்சல் முதலான 26 வகையான உண்ணல் முறைகள்,உணவை வெறுமனே விழுங்கும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.உணவே மருந்தாக இருந்த பழந்தமிழரின் உணவு அறிவியல் வியப்பூட்டுகிறது.
உணவும் பெண்ணும்,இலக்கியத்தில் பெண்களின் உணவு கட்டுரைகள்,உணவுக்கும் பெண்ணுக்குமான இறுகிய பிணைப்பைப் பேசுகின்றன.
சைவ உணவு உயர்ந்தது,அசைவ உணவு கீழானது என்கிற மோசமான பொதுப்புத்தியின் மீது நுட்பமான தாக்குதலை நிகழ்த்துகிறது சைவமும் அசைவமும் கட்டுரை.தலித்துகளின் உணவில் மாட்டிறைச்சியும், பன்றியிறைச்சியும் முக்கிய அங்கம் வகிப்பதற்கு,உயர் வகுப்பினர் வேண்டாமென ஒதுக்கிய மலிவான உணவு என்பதுதான் காரணம் என்கிற தீபா பல்கின்ஸ் தக்கின் கருத்து சிந்திக்க வைக்கிறது.வட மாநில தலித்துகளிடையே ரக்தி என்னும் ரத்தப் பொறியல் ஏன் முக்கிய உணவாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலும் இதையே உறுதி செய்கிறது.
1830ல் க்விட்லட் என்ற ஜோதிடர் கிரகங்களை வைத்து மனித எடையை கணிக்க முடியுமா என்று அறிய B.M.I (Body Mass Index)ஐ உருவாக்கினார்.இன்று அதை டிவத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதர்களை எப்படியெல்லாம் அடிமையாக்கி வைத்திருக்கின்றனர் என்பதையும்,நம் அன்றாட உணவை கார்ப்ரேட்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதையும் தெளிவாகப் பேசுகிறது கார்ப்பரேட் கைப்பிடியில் உணவு கட்டுரை.
பகல்,இரவு கால மாற்றத்தை உணரும் சக்தி சிர்கேடியன் கடிகாரம்,வைட்டமின் டி சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது இப்படி ஆச்சர்யமான தகவல்களும் நிறைந்திருக்கின்றன.
தவளையின் மரணணு செலுத்தப்பட்ட தக்காளி,மீனோட மரபணு செலுத்தப்பட்ட ஸ்ட்ராபெரி என்று மரபணு மாற்றம் என்ற பெயரில் அடிக்கப்படுகிற அபாயமான கூத்துகளைப் பேசுகிறது மரபணு மாற்றம் கட்டுரை.
பிற நாடுகளின் மீது விதைகளை வைத்து தொடக்கப்படுகிற போர்களையும்,பூச்சிக் கொல்லி மருந்துகள் எவ்வாறு மனிதர்களின் ஆரோக்யத்தைச் சீர் குலைக்கின்றன என்பதையும் விரிவாகப் பேசும், பசுமைப் புரட்சியின் தீமைகள்,விதையென்னும் பேராயுதம் ஆகிய இரண்டும் முக்கியமான கட்டுரைகள்.
Globalization பற்றி அறிவீர்கள்.Glocalization பற்றி அறிவீர்களா?உணவு அரசியலின் எதிர்காலம் என்கிற முக்கியமான கட்டுரை,அதைத் தெளிவாக்குகிறது.
இந்தப் புத்தகத்தில்,மிக முக்கியமாக நான் கருதுவது,வெறுமனே பிரச்சனைகளையும்,அதன் தீமைகளையும் பற்றி மட்டும் பேசாமல்,அதற்கான தீர்வுகளையும் விரிவாகப் பேசுவதுதான்.
கட்டுரைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள், கவிஞர்கள் பிருந்தாசாரதி,பழனி பாரதி போன்றோரின் கவிதைகள்,கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் காட்சிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.
உணவுன்னா அதிரசம் தெரியும்,அதென்ன அரசியல்?போன்ற மெலிதான நகைச்சுவை ஊடாடும் நடையும்,உரையாடல் பாணியும் வாசிப்பவருக்கு எளிதில் நெருக்கமாகின்றன.
கோ.லீலா அவர்களின் கடும் உழைப்பும்,தீராத் தேடலும்,அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியன.
அட்டைப் படம் அழகு.நேர்த்தியான வடிவமைப்பு.
சாதமாகவும்,ரைஸாகவும் அறியப்படும் சோறு மற்றும் நாம் உண்ணும் அல்லது உண்ண வைக்கப்படும் உணவின் பின்னுள்ள அரசியலை மிகத் தெளிவாக, எளிமையாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவர்களுக்கு,அடுத்த வேளை உணவு உண்கையில்,புத்தகத்தின் ஏதாவதொரு வரி நிச்சயம் நினைவில் வரும்.
No comments:
Post a Comment