Monday 4 March 2024

சிற்றலை மீதமர் தும்பி கவிதை நூல்

ரேவதி ராம் எழுதிய " சிற்றலை மீதமர் தும்பி" கவிதை நூல் விமர்சனம்.
தும்பி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எந்த வயதிலும் தும்பியைப் பார்த்தால் ஆசையாகத் தொட ஓட வைக்கும் இக்கவிதைகளைப் போல.
மனம் வறண்ட பாலைநிலத்தில் மழைத்துளியென ஒரு சொல் போதும் வனமாகிவிடுவேன் என்ற கவிதை சொல்லாலே வாழ்கிறது இவ்வுலகு என்பதை உணர்த்தும் கவிதை.
" காய்ந்து கருவேறிய
மரமாய் நிற்கும்
என்மனம்.
ஒவ்வொரு பட்டையாய் உதிர
உன் மொழி கேட்டு.
பச்சை வாடை கிளம்பி
முத்திரை ஒன்று உள்ளுக்குள்
துளிர்க்கத் தொடங்கியுள்ளது."
இருந்ததையும் இன்மையையும் ஒன்றாய் பார்க்கும் ஜென் தத்துவக் கவிதைகள் பல உண்டு.வீழும் சருகின் நினைவலைகள் தரை இறங்காமலே நினைவுகளுடன் ஏ வாழ வைக்கும் கவிதையாக.
கருத்துச் சுதந்திரம் அற்ற இந்த நாட்டில் கடவுளைப் பற்றி எழுதினால் கைது நிச்சயம் என்பதைக் கூறும் அரசியல் கவிதையாக
" ஆமாம்
எழுத வேண்டும்
கவிதைதான்
கடவுளைக் குறித்துத் தான்
பேனாவைப் பிடிக்கையில்
சிறு சந்தேகம்
கைதாகப் போவது
நானா?
சொல்லா?"
சொல்லைத் தாங்காது கைது என்ன? சொல்லிற்காக உயிரைக் கொடுத்த கௌரி சங்கர் போல பலரைக் கண்முன்னே வரவழைத்த கவிதை .
காதலைக் கூறும் பல கவிதைகள் மிக அருமை.
பல கவிதைகளைக் குறியீட்டுக் கவிதைகளாக உணர முடிகிறது.
" நீரில் தத்தளித்த
சிற்றெறும்பிற்காக
ஒற்றை இலையை
உதிர்க்கிறது
பெருமரம்".
இது பேரன்பால் கரம் கொடுத்து துயரங்களைத் துடைக்க முயலும் கவிதையாகிறது.
எது சாமி? எனக் கேள்வி கேட்கும் கவிதைக்கு பதிலைத் தான் உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது.
வாசிக்கப்படாத கவிதையாக வாழும் கவிஞரின் வாழ்க்கை இசையாக உலகை வெல்லட்டும்.
இசையாக,தும்பியாக,இலையாக,சருகாக,
மரமாக,நதியாக ,என இயற்கையில் கரையும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இலக்கிய மகள் பெறும் புகழை நான் பெற்றதாகவே கருதி எனது மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday 3 March 2024

"கனவின் இசைக்குறிப்பு "நூல் விமர்சனம்

கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்  எழுதிய"கனவின் இசைக்குறிப்பு " கவிதை நூல்.
நூலின் பதிப்புரையும் ,அணிந்துரையும் பேரன்பின் பிரதிபலிப்பு.
இணையரின் கனவை நனவாக்க கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan எடுத்துக் கொண்ட முயற்சிகளையே ஒரு நூலாக எழுதலாம். கரம்பிடித்து இணையரை கவிதை வானில் சிறகடிக்க விட்டு பார்த்து மகிழும் அன்புத் தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
"சிறகுகள் துளிர்க்கும் கனவு" என்ற கவிதையில் துவங்கி
" முடிவும் தொடக்கமும்" என்ற கவிதையில் முடியும் இந்த நூல் முழுவதும் வாசிக்கும் போது ,பின்னணியில் இளையராஜாவின் இசையை உணர்ந்தால் கவிஞரின் வானத்தில் நீங்களும் பறவையாக ஆகமுடியும்.
குழந்தையின் அன்பில் கரைந்த தாய் வளர்ந்த மகளிலும் குழந்தமையை எண்ணித் ததும்பும் தாய்மைக்கவிதை,
இலை , நிலா,பூநாகம் தடாகம்,
அரசியல், காதல், காணும் காட்சிகள்,
தோழியின் நிலை, வண்ணத்துப்பூச்சி, தேநீர்,உறைந்து மீளும் அங்காடி, மனம் வருடும் ஹரிஹரனின் இசை,நட்பு,பதின்மம்,வேங்கை வயல், குளம், செவிலியர், செருப்பு என பற்பல பாடுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு குறியீட்டு கவிதைகள்,படிமக்கவிதைகளை எழுதி உள்ளார்.
சில கவிதைகள் முத்தம் தரும், சில கவிதைகள் வாதை தரும், சில கவிதைகள் வன்மை காட்டும்...எல்லாக் கவிதைகளிலும் மனித நேயம் வாழும்.பெரிதும் நேசிக்கும் படும் தந்தை பெரியாரின் கவிதை.

எனக்கு பிடித்த சில கவிதைகள்
"நரம்புகளில் ஊர்கிறது எறும்பு
சிலிர்த்துக் கொள்கிறது
இலை'
இக்கவிதையைப் படிக்கும் போது நமது நரம்புகள் சிலிர்ப்பதை உணர முடியும்.

"சவாரி குதிரைகளை  வரைவது தண்டனை எனக்கூறும் தோழிக்காக இரங்கும் கவிதையொன்று.
தேநீர் இவரது கவிதைகளில் பல இடங்களில் இடம் பிடிக்கிறது நமது மனங்களிலும்.
அவரது
" அகல் அளவு இதயத்தில்
தேக்கரண்டி சொல் நிறைத்து
நின்றெரியும் சிறு சுடர் _ நீ"
சுடர் பிரகாசமாக எரிந்து பல கவிதைகளுக்கு ஒளி கூட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சாத்தானின் பிள்ளைகளைப் போல கவலையற்று வாழவே நேர்மையான உள்ளங்கள் விரும்பும்..
பரிதவிப்பின் படபடப்பைக் கூறும் கவிதையாக
" செவிமடுக்கத் துணிந்த நொடிக்கு
சிலந்தி வலையில் படபடக்கும்
தும்பியின் சாயல் "சிறப்பானதொரு கவிதை.
நிறைய கவிதைகளால் நமது மனதை நெய்து வலைசெய்து பிடித்து வைத்துக் கொள்கிறார்.
புதுக்கோட்டை இலக்கிய உலகின் இவரது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக..... இந்நூல் " கனவின் இசைக்குறிப்பாக" இசைக்கிறது. 
பேரன்புக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டுச் சிறப்பித்த நூலில் இருந்து,
தீக்கமழும் செங்குருதி,நெகிழி உதடுகள் என பல புதிய பதங்களை முத்தெடுக்கலாம்.
சமூகத்தின் மீதான தீரா அன்பை கவிதைகளாக வடித்து,
கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வானில் தடம் பதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

முட்டிக் குறிச்சி நாவல் விமர்சனம்

எழுத்தாளர் சோலச்சி எழுதிய"முட்டிக்குறிச்சி "நாவல்

 முட்டி குறிச்சி நாவல் மனதில் படிமமான நாவலாக, நான் வாசித்த நாவல்களில் சிறப்பான நாவலாகக் கருதுகிறேன் .

முட்டிக் குறிச்சி என்பது ஒரு பெயர் காரணம். அதிர்ச்சி அளிக்கக் கூடிய,ஒரு சமூக சீர்கேட்டின் அடையாளச் சின்னம்.

 இந்த நாவல் படிக்கும் பொழுது நம்மையும் இயற்கையின் சூழலில் அமரவைத்து ரசிக்க வைக்கின்றது.

தீத்தன் பாலாயியின் மகன் அழகப்பனும் மருமகள் பொன்னழகியும் வயல்நாட்டிலிருந்து இடையாத்தூருக்கு அடர்ந்த காட்டின் வழியாக செல்வதாக நாவல் துவங்குகிறது.
அப்படிச் செல்லும் போது இருவருக்குமிடையேயான பேரன்பு,காதல், தாம்பத்யம்,பொன்னழகியின் மருத்துவ அறிவு,நமக்கு முந்தைய மூன்றாவது தலைமுறை காலத்தில் நிகழும் கதை.

 வழியெங்கும் பறவைகளை, மரங்களை, மூலிகைகளை அவர்கள் மூலம் ஆசிரியர் நமக்கு கடத்துகிறார்.

சங்க இலக்கியம் கூறும் ஒல்லையூர் பற்றி, தொரட்டிப்பழ வாசனை பற்றி படிக்கும் போது நமக்கும் எச்சில் ஊறவைக்கும் எழுத்து.
காளைக்கோழி மலை என்ற தேன் மலையின் தேனிற்காக படை திரட்டி வந்த தனஞ்செயவேலனை வெற்றி கொண்ட கார்வேந்தன் படைகள் என வரலாற்று செய்திகளையும் ஆங்காங்கே கூறிச் செல்லும் பாங்கு சிறப்பு.

ஒடுக்கப் பட்ட மனிதர்களிடையே காணப்படும் மனித நேயம்,அவர்களை தீண்டத்தகாதவர்களாக புறந்தள்ளிய கொடுமை.அவர்களது வாழ்வியலை நமக்கு அணுக்கமாக கூறும் நாவல்.
பசுவின் பிரசவ வேதனை கண்டு தன் தாய் வலி உணரும் அழகப்பன்.

தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பிச்சாயி... ஆதித் தமிழர் மருத்துவத்தில் சிறந்த அறிவுடையோராக வாழ்ந்திருந்த தை உணர வைக்கிறார்.

பிழைப்பு தேடி மேகாட்டு பக்கமிருந்து வந்தவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை அடிமைப்படுத்திய வஞ்சகம் ஆரிய திராவிட பகையைக் கூறும்.மேலக்குடியிருப்பு மக்களுக்கும் கீழக்குடியிருப்பு மக்களுக்கும் இடையே நடக்கும் வாழ்தலுக்கான போராட்டத்தை உணர்த்துகிறது.

ஊரிலுள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஊருக்கு வெளியே முட்டிக் குறிச்சி என்ற சுகாதாரமற்ற குடிசையில் தங்க வேண்டும். அப்போது ஆண்கள் சமைத்து அதை( சிறிய மண்சட்டியில்) முட்டியில் வைத்து சிறுமிகளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த சோற்றுக்கு முட்டிச்சோறு என்று பெயர். பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை பற்றி பொன்னழகி அங்குள்ள பெண்களிடம் உரையாடுகிறாள்.இந்த கொடுமையை ஒழித்தால் தான் பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று எண்ணிய பொன்னழகி முட்டிக்கு பிரச்சினை எப்படி மாற்றினாள் என்பதை நாவலைப் படிப்பதன் மூலம் உணரலாம்.

 பெண்களை இழிவுப்படுத்துகின்ற கொடுமைக்கு பொன்னழகி எப்படி முடிவுக்கட்டினாள் அவளால் முட்டிக்குறிச்சி எப்படி மாறுகிறது என்பதை உணர்த்தும் நாவலாக "முட்டிக்குறிச்சி " உள்ளது.

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 ஆண்டு பெற்றுள்ளது..
எழுத்தாளர் சோலச்சியின் முதல் நாவல் முத்தான நாவலாக அமைந்துள்ளது.மனம் நிறைந்த வாழ்த்துகள்.
விலை ₹320
எழுத்து பிரசுரம் சென்னை

Tuesday 4 July 2023

மாமன்னன்

மாமன்னன் 
உண்மையில் நடிப்பில் வடிவேலு மாமன்னன் என்று நிரூபித்த படம்.
பண்பாடு இல்லாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை ,அரசியல் பண்பாடு தெரிந்தவர் வெல்ல முடியும் என்று உரைக்கும் களம்.
வாழ்வியல் உண்மை கதையாக ,கதையே இங்கு நாயகனாக உருவெடுத்துள்ளது.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ,தீண்டாமை தலைவிரித்து ஆடுவதை கண்முன் காண்கிறோம். இதெல்லாம் இப்போது இல்லை என்று சமாளிக்க முடியாது .ஏனெனில் இன்னும் சாட்சியாக வேங்கை வயல் .முடிவு தெரிந்தும் தீர்ப்பு வழங்காத, அல்லது வழங்க விரும்பாத பண்பாடு இல்லாதololo அரசியல்.
தெறிக்கவிடும் வசனம் ,மனதில் பதியும் காட்சிகள், ஆதிக்க குருதி நிறைந்த செம்மண் களம்.
 தந்தைக்கு மகனுக்கும் நடக்கின்ற போராட்டம். ஒரு மகன் தந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தக்கூடிய படம் .
பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு சம்பாதிக்க நினைக்கும் திரை உலகத்தில் இப்படியும் ஒரு படம் .இனி தமிழ்ச் சினிமா எதார்த்தத்தை காட்சிப்படுத்தாமல், நாலு பாட்டு நாலு சண்டை என ஓட்ட முடியாது. மாமன்னனுக்கு கிடைத்த வரவேற்rt.ghhjjgபு, மக்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் உணர்த்தியுள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டியது தானே நியாயம்.
நாயக பாவம் இன்றி, வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பை பெறுகிறார் உதயநிதி .தனது ஆழமான நடிப்பால் மிளர்கிறார். படத்தின் கருவாக என்ன இருக்க வேண்டும் ?
 படம் யாருக்காக எடுக்க வேண்டும்?
 படம் எதைக் கூற வேண்டும் ?என்பதில் இயக்குனர் மாறி செல்வராஜ் மிகத் தெளிவாக இருப்பது, வலுவான திரைக்கதைக்கு அஸ்திவாரம் ஆகிறது. பகத் பாசிலின் நடிப்பு அவரது திறமையின் உச்சம் எனலாம்.
 கண்டும் காணாமல் அலட்சியமாக நாம் கடந்த உண்மைகள் முகத்தில் அறைந்து நமக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்குவதை தவிர்க்க இயலவில்லை. ஏன் கடவுளாக இருந்தாலும் கூட கனக சபை ஏறிட எல்லாராலும் முடியாதல்லவா .வேரோடு இருக்கும் சாதி மத ஆதிக்க உணர்வை தகர்த்தெறியும் சிறு உளியாக மாமன்னன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இப்படம் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும்.

Saturday 14 April 2018

vee 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..












Monday 3 July 2017

வீதி -40

வீதி கலை இலக்கியக்களம் -40

நாள்: 25.6.17
இடம் :ஆக்ஸ்போர்ட் சமையர்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
காலம் :10.00 காலை

வரவேற்புரை :கவிஞர்  கீதா .

தலைமை :திருமிகு இரா .ஜெயா
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி .

சிறப்பு விருந்தினர் :கவிஞர்  முருக தீட்சண்யா. மயிலாடுதுறை

கவிதை :கவிஞர்  மீரா .செல்வகுமார்,கவிஞர் செந்தில்குமார்.

நூல் அறிமுகம் :செல்வி எழில் ஓவியா "உயிராயுதம் "

பாடல் :கவிஞர் பவல்ராஜ் .

நன்றியுரை :கவிஞர் சிவகுமார் .

வீதி குறித்து விமர்சனங்கள்

செல்வி எழில் ஓவியா

எழில் ஓவியா added 7 new photos — feeling happy with இரா.ஜெயா and 3 others.
கப்படுத்தினேன்.மது ஒழிப்பிற்காக உயிரைக் கொடுத்த அய்யா சசி பெருமாள் அவர்களின் போராட்ட வாழ்க்கையை அவருடனே 10 வருடங்களுக்கு மேலாகப் பயணித்து இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள். 😀🙏🙏🙏😀



சிறப்பு விருந்தினர் கவிஞர் முருகதீட்சன்யா அவர்கள்
முருக தீட்சண்யா added 5 new photos.
,வீதி இலக்கிய களத்தின் அழைப்பாளனாக.
39 நிகழ்வுகளை ஒரு இலக்கிய அமைப்பு சத்தமில்லாமல் கடந்திருப்பது பெரும் வியப்பை தந்தது,40 வது நிகழ்வு சோலச்சியின் பாடலோடு தொடங்கியது, தொடர்ந்தது கவிதை வாசிப்பு, படித்ததை பகிரும் தோழர்கள் என்று ஒரு கலை இலக்கியத்திற்கான முழு தேடலாக வீதி இருந்தது,
#எழில்_ஓவியாவின்
நூல் விமர்சனத்தை விடவும் அவர் மேடையை கையாளும் விதம் என்னை கவர்ந்தது
அதை விடவும்
அவருக்குள்ள கோபமும் அதில் உள்ள நியாயமும் அவருக்கு இருக்கும் தெளிவான புரிதலும் வியக்க வைத்தது,தன் இயல்பில் தன்னெழுச்சியாக துடிப்பாக வளரும் இப்படியான குழந்தைகளை பார்க்கிற போது ஒரு மகிழ்ச்சி தோன்றும் ஒரு மகளின் தகப்பனாக.
Devatha Tamil அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கினைத்திருந்தார்,தலைமை ஏற்ற இரா.ஜெயா அவர்கள் தன் இயல்பான மொழியால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்,ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல. இவர் எங்கள் மயிலாடுதுறைக்காரர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒரு நல்ல அவையில் என் மனம் கவர்ந்த ஆளுமைகள் குறித்து பேசும் வாய்ப்பு Stalin Saravanan வழியாக கிடைத்தது
அவருக்கும் என் அன்பு.
வீதிக்கு என் வாழ்த்துகள்.
நண்பர் Andanoor Sura
தோழர் Neela Alangudi இவர்களின் சந்திப்பும் மகிழ்வை தந்தது.
 



சோலச்சி புதுக்கோட்டை பாடலுடன் தொடங்கி கவிதை விமர்சனம் கதை என கலை கட்டியது வீதிக்கு வந்த தோழர்கள். இது 40வது கூட்டம். வைகறை நினைவு படுத்திக் கொண்டோம். அவரது மனைவியை சந்தித்தேன். என்னால் முழுமையாக அவர் பற்றிய நினைவை பகிர முடியவில்லை. தாழம்பூ என்ற சிற்றிதழை 39ஆண்டுகளாக நடத்தி வரும் கோவிந்தராசன் அய்யாவை சந்தித்தேன் கிரியா ஊக்கியாக இருந்தார். உள் மனம் அவரை உதாரண புருசராக எடுத்துக்கொண்டு வலுப்பெற்றது. எல்லாவற்றுக்கும் நன்றிகளை கீதா Devatha Tamil தோழருக்கே சொல்ல வேண்டும். நல்ல சைவ சாப்பாட்டுடன் ஊர்த்திரும்பினோம். துண்டு போர்த்தி கௌரவித்தார்கள் பெருசா இருந்திச்சு. நன்றி முருக தீட்சண்யாவுக்கு.

நேற்று தோழர் Neela Alangudi வை சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி ஒரு மிகச் சுவாரஸ்யமான புத்தக சேஸிங் அனுபவத்தை சொன்னார். அது கதையாக மாறினால் நன்றாக இருக்குமென தோனியது. கவிஞர் பவுல்ராஜ் மக்களிசை பாடலாக காலம் மாறிப்போச்சு என்று தானே எழுதி இசையுடன் பாடினார் மிக அருமையான தொடக்கம். Devatha Tamil தோழரின் தொடக்கம் அருமை இரா.ஜெயா தோழர் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு நல்ல தேர்ந்த வாசிப்பாளாராக இருப்பதும் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.




துவாரகா சாமிநாதன் added 2 new photos.
 சூழலில் மிகத் திடமாக பேசினாள். என் செல்லப் பெண் துவாரகாவை இப்படித்தான் வளர்க்க வேண்டுமென நினைக்கச் செய்தாள். மக்களிசை பாடலை பாடியதும் தன் விமர்சனமாக பெண்ணின் உடைகளை மட்டுமே விமர்சித்து பாடும் போக்கு தவறெனவும் தனக்கு தாவணி கம்பெர்டா இருந்தா போட்டுகிறேன் அப்படியில்லை ஏதாவது திருநாளில் வீட்டில் மட்டும் தாவணியும் மற்ற நாளில் ஜீன்ஸ் போடுவதில் என்ன குற்றம் கண்டீர் பாப் கட்டிங்கும் குட்டை பாவாடை போட்டால் உங்களுக்கேன் கோபம் வருகிறது அது போல ஆணுக்கான உடையை ஏதும் சொல்கிறீர்களா என பொரிந்து தள்ளினாள். பதில் சொல்லும் வரை பாடிய அய்யாவை விடவில்லை. சபாஷ் போட வைத்தாள். வளர்ப்பும் வாசிப்பும் சரியான பாதையில் சென்றால் அவள் பெரிய ஆளா வருவா..நாமும் அவளை வாழ்த்துவோம். அவளாண்ட போன் நம்பர் வாங்காது வந்துட்டேன். நாமும் அவளோடு உரையாடி உரமேற்ற வேண்டுமே. சமூகத்திற்கு ஒரு போராளி கிடைத்து விட்டாள்.
நம்பிக்கை ஊற்று நீ
வீதிக்கு வா மனிதியே
உலகம் உன் பின்னால் வரும்
கனல்மதிக்கு பிறகு அடுத்ததாக இவளை காண்கிறேன்.
வளர்த்தெடுத்த அன்னை அமிர்தா தமிழ் நன்றியும் அன்பும்.

இன்றைய தினத்தை முருக தீட்சண்யா வோடு வீதியில் களித்தேன். மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு மக்களிசை. புத்தக விமர்சனம். கவிதை வாசிப்பு என கலந்து பட்ட விருந்தாக அமைந்தது புதிய அன்பர்கள் நிறைய பேரை சந்தித்த மகிழ்ச்சி. தீட்சண்யாவின் அழகான மென்மையான கதை சொல்லல் முறையில் மூழ்கி திளைத்தேன். எழுத்தும் கலையும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென ஊடு இலை பாவாக பேசினார் பாரதியில் தொடங்கி புதுமை பித்தன். கு.அழகிரிசாமி. பிரபஞ்சன் என அவர்களின் கதையை மட்டும் சொல்லாமல் அவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திகளை சொல்லி நெகிழச் செய்தார். வைக்கம் பசீரைப் பற்றி அவர் பேசி முடித்த போது அனைவரும் அஞ்சு நிமிசம் அமைதியாய் நெகிழ்ந்திருந்தனர். இதற்கெல்லாம் நன்றிகள் தோழர்களுக்கு Devatha Tamilஅமிர்தா தமிழ்சோலச்சி புதுக்கோட்டைமிடறு முருகதாஸ்Andanoor Sura
கவிஞர் Andanoor Sura
கவிஞர் முருகதீட்சண்யாவின் இன்றைய உரை முக்கியமானது. கவிஞரான அவர் சிறுகதைகள் குறித்து பேசிய விதமும் அவர் எடுத்துகொண்ட கதைகளும் அவரொரு தேர்ந்த வாசிப்பாளர் எனக் காட்டியது. நன்றி கவிஞரே