மாமன்னன்
உண்மையில் நடிப்பில் வடிவேலு மாமன்னன் என்று நிரூபித்த படம்.
பண்பாடு இல்லாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை ,அரசியல் பண்பாடு தெரிந்தவர் வெல்ல முடியும் என்று உரைக்கும் களம்.
வாழ்வியல் உண்மை கதையாக ,கதையே இங்கு நாயகனாக உருவெடுத்துள்ளது.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ,தீண்டாமை தலைவிரித்து ஆடுவதை கண்முன் காண்கிறோம். இதெல்லாம் இப்போது இல்லை என்று சமாளிக்க முடியாது .ஏனெனில் இன்னும் சாட்சியாக வேங்கை வயல் .முடிவு தெரிந்தும் தீர்ப்பு வழங்காத, அல்லது வழங்க விரும்பாத பண்பாடு இல்லாத அரசியல்.
தெறிக்கவிடும் வசனம் ,மனதில் பதியும் காட்சிகள், ஆதிக்க குருதி நிறைந்த செம்மண் களம்.
தந்தைக்கு மகனுக்கும் நடக்கின்ற போராட்டம். ஒரு மகன் தந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தக்கூடிய படம் .
பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு சம்பாதிக்க நினைக்கும் திரை உலகத்தில் இப்படியும் ஒரு படம் .இனி தமிழ்ச் சினிமா எதார்த்தத்தை காட்சிப்படுத்தாமல், நாலு பாட்டு நாலு சண்டை என ஓட்ட முடியாது. மாமன்னனுக்கு கிடைத்த வரவேற்பு, மக்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் உணர்த்தியுள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டியது தானே நியாயம்.
நாயக பாவம் இன்றி, வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பை பெறுகிறார் உதயநிதி .தனது ஆழமான நடிப்பால் மிளர்கிறார். படத்தின் கருவாக என்ன இருக்க வேண்டும் ?
படம் யாருக்காக எடுக்க வேண்டும்?
படம் எதைக் கூற வேண்டும் ?என்பதில் இயக்குனர் மாறி செல்வராஜ் மிகத் தெளிவாக இருப்பது, வலுவான திரைக்கதைக்கு அஸ்திவாரம் ஆகிறது. பகத் பாசிலின் நடிப்பு அவரது திறமையின் உச்சம் எனலாம்.
கண்டும் காணாமல் அலட்சியமாக நாம் கடந்த உண்மைகள் முகத்தில் அறைந்து நமக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்குவதை தவிர்க்க இயலவில்லை. ஏன் கடவுளாக இருந்தாலும் கூட கனக சபை ஏறிட எல்லாராலும் முடியாதல்லவா .வேரோடு இருக்கும் சாதி மத ஆதிக்க உணர்வை தகர்த்தெறியும் சிறு உளியாக மாமன்னன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இப்படம் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும்.