Monday, 19 May 2025

நந்தினி அன்னாள்

அகரம் அறக்கட்டளை சூர்யாவிற்கு மனம் நிறைந்த நன்றி 
அம்மா எனக்கு திருமணம் அவசியம் நீங்கள் வரனும் மாணவி நந்தினி அன்னாள் 
கள்ளங்கடமில்லா  அன்பை பாசத்தை அவள் மட்டும் அல்ல அவளது குடும்பமே  அள்ளித்தரும்.
ஆறாம் வகுப்பில் அவள் சேர்ந்த போது அத்தனை குட்டியாக அமைதியான குழந்தையாக வந்து சேர்ந்தாள்.அவளது அப்பா ஒரு மாற்றுத்திறனாளி பள்ளியில் சேர்த்து பத்திரமா பார்த்துக்குங்க என்று கண்கலங்கினார்.
நன்கு படிக்கும் அவள் இரண்டு நாட்கள் வரவில்லை . மூன்றாம் நாள் பள்ளிக்கு வந்த போது அவளது கையில் காயம் இருந்தது" என்னடா இது? எப்படி ஆச்சு.சுடுதண்ணீரைக் கையில் கொட்டிக் கொண்டேன் மா. "அவளது அம்மா மீது கோபம் வந்தது "ஏன்டா நீ மேடை  உயரம் கூட இருக்க மாட்டே,நீ ஏன்  தூக்கும்"அம்மா என்ன பண்றாங்க ? என்றேன்
" அம்மாவால் முடியாதம்மா "
ஏன்டா 
அம்மாவுக்கு போலி யோஅட்டாக்னால அவங்களால எந்திரிச்சு நிக்க முடியாது, தவழ்ந்து தான் வருவாங்க .
"நான் தான் சமையல் எல்லாம் ஹெல்ப் பண்ணுவேன். அதனால அம்மா வந்து தூக்க முடியாதுமா நான் தூக்கும்போது தடுமாறி விழுந்திருச்சு" என்றாள்.
மனசு வேதனையாக இருந்தது ஏனெனில் அவனது அப்பா ஒரு மாற்றத்திறனாளி. அம்மாவும் ஒரு மாற்றத்தினாளி என்பதை கேட்ட போது நல்ல வேளை குழந்தைகள் இருவரும் நல்லா பிறந்துட்டாங்க என்று நிம்மதி ஒரு நிமிடம் வந்தது.
 இந்த குழந்தை எப்படியாவது நல்லபடியாக படித்து முடித்து வேலைக்கு வந்து விட வேண்டும் ,அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இன்று செயலாக அவள் செய்யும் பொழுது மனம் நிறைவாக இருக்கிறது.
இன்று அவள் வேலைக்குச் சென்று அவளது ஊதியத்தில்  ஒரு வீடு கட்டி அதில்  அம்மாவையும் அப்பாவையும் வைத்து பார்த்துக் கொள்வது பெருமையைக் தந்தது.
மேலும் அவளது தங்கை ஹெலன்  விளையாட்டில் மிக ஆர்வமாக இருப்பாள் . அவளும் அகரம் அறக்கட்டளை மூலம் படித்து இன்று அவளும் பணிக்கு செல்கிறாள் .
இரண்டு பெண் குழந்தைகள் தங்கள் குடும்பத்தை தாங்க கூடிய காட்சியை கண்முன் காண்கின்றேன்.
 நேற்று அவள் திருமண அழைப்பிதழ் வைக்க நேரில் தான் வருவேன் என்று அடம் பிடித்து வீட்டுக்கு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
 அம்மா ,எங்க அப்பா ரொம்ப நல்ல அப்பா.   என்னைய வந்து பொம்பள பிள்ளை அங்க போகக்கூடாது எங்கே போகககூடாது என்று சொன்னதே இல்லம்மா. மூணாவது படிக்கும் போதே இருக்கும்போதே கையில முறுக்கு பாக்கெட்  கொடுத்துட்டு வா அப்படின்னு சொன்ன அப்பா.
 பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இப்படி சின்னப் புள்ளய அனுப்புறிங்கன்னு கேட்டப்ப கூட ,அதெல்லாம் அவ போயிட்டு வருவாங்க தைரியமா சொன்னாங்க ,
முறுக்கு விக்க ஆரம்பிச்ச பிறகுதான் எங்க வீட்ல கொஞ்சமாவது சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்துச்சுமா.
 அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதே ஒரு பெரிய விஷயம் மா. ஏன்னா எங்க அம்மாவுக்கு 30 வயசு ஆயிடுச்சு அம்மாச்சி மட்டும்தான் துணைக்கு .அம்மாச்சிக்கு பிறகு பார்த்துக்கொள்வதற்கு ஆள் இல்லயேன்னு  அம்மாச்சி கவலைப்பட்ட பிறகுதான் திருமணத்திற்காக விளம்பரம் கொடுத்திருக்காங்க .
அதை அப்பா படித்து விட்டு கஷ்டப்படுறாங்க போலன்னு நினைத்து 100 ரூபாய் பணம் அனுப்பி இருக்காங்க.  அதை வாங்கிய அம்மா "பணமா நாம கேட்டோம் ?நம்ம திருமணம் பண்ணிக்க தானே  விளம்பரம் கொடுத்தோமென  வருத்தப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பி இருக்காங்க .
திருப்பி அனுப்புன பிறகு தான் அப்பா வந்து அம்மாவ பாத்து திருமணம் செஞ்சிருக்காங்க. அப்பா வந்து கிருத்தவரா இருக்கறதுனால அம்மா இந்துவா இருக்கறதுனால அவங்க அப்பா வீட்ல யாருமே ஒத்துக்கல .அதனால அப்பா மட்டும் தனியா வந்து அம்மாவை கல்யாணம் பண்ணி இருக்காங்க.  அன்னைக்கு சொந்தக்காரர்கள் யாரும் இல்லம்மா ..இன்னைக்கு எல்லாரும் வந்துருப்பாங்களேடா . ஆமாமா இன்னைக்கு எல்லாரும் வந்திருக்காங்க நடுவுலயே வந்துட்டாங்க கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணாங்கம்மா .எங்களை சுத்தி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க மா.
அதனால நாங்க வந்து இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம் . நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க அகரம்  தான் காரணம் மா.படிப்பு மட்டும் தான் மா நமக்கு துணை.படிச்சா போதும்னு புரியுது மா.
அகரம் வந்து எனக்கு வாழ்க்கையை வந்து எப்படி புரட்டி போட்டுச்சுங்கறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா. அகரம் மட்டும் இல்லன்னா நானெல்லாம் வந்திருக்கவே முடியாதுமா இது மாதிரி. நான் கூட பரவாயில்லை அம்மா இருக்கிறதுக்கு இடம் இருக்கு அப்பா அம்மா இருக்காங்க .ஆனா என்ன விட ரொம்ப கஷ்டப்படுற புள்ளைங்க அகரத்தினால படிச்சு இன்னைக்கு மேல வந்திருக்காங்க .சொந்தமாக வீடு வாங்கி இருக்காங்க .குடும்பத்தை பார்த்துக்கிறாங்க  அகரம் அறக்கட்டளை அவ்ளோ செஞ்சுகிட்டு இருக்காங்க அதனால நான் வந்து இப்ப வர்ற புள்ளைங்களுக்கெல்லாம் நான் கைட் பண்ணிட்டு இருக்கேன் மா என்று சொன்னப்ப அப்படியே கண்ணீர் தழும்பதழும்ப நான் அவளை அப்படியே கட்டிக்கொண்டேன்.
 ஏன்னா  நான் பெற்றெடுக்காதமகள் மாறி அவ முன்னாடி நின்னு  என்னோட எண்ணங்களை  அவள் செயலாற்றுகின்றதை நினைக்கும்போது மனசு ரொம்ப பெருமையாவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .
. இப்படி ஒவ்வொரு குழந்தையும் ஒரு அரசு பள்ளியில் படிச்சிட்டு தன்னுடைய குடும்பத்த பார்த்துக்க கூடிய அளவுக்கு வர்றதுன்னா அது தமிழ்நாடு அரசு  பள்ளி ஆசிரியர்கள் அது மட்டும் இல்லாம ,பள்ளி முடித்த பிறகு  தடுமாறி நிக்கிற குழந்தைகளை காப்பாற்றக்கூடிய அகரம் போன்ற அறக்கட்டளைகள்  உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்கன்னு  அப்பப்ப காமிச்சுகிட்டே இருக்காங்க "உண்டாலம்ம  உலகம்" அப்படின்னு முன்னோர்கள் சொன்னது உண்மை.
 இன்னைக்கு அவ சொந்தமா ஒரு வீடு கட்டி ,நல்ல வேலையில் தன்னுடைய குடும்பத்தையும் பார்த்துகிட்டு தனக்கான திருமணத்திற்கான எல்லா செலவையும் அவளே சம்பாரித்து அவளது பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கிறாள்.
மாப்பிள்ளை எப்படி வேண்டும் எனக் கேட்ட அப்பாவிடம், எனக்கு ரொம்ப பணக்காரங்களா வேணாம்பா  யாரா இருந்தாலும் என்னைய புரிஞ்சுகிட்டு நம்ம குடும்பத்தை புரிந்து கொள்ள இருந்தா போதும்னு நான் கண்டிப்பா சொல்லிட்டேன் மா .
மாப்பிள்ளை எப்படி மா நல்ல குணமா என்று கேட்ட போது ராணுவத்துல இருக்காங்க எனக்கு அஞ்சு வருஷமா  தெரியும் நான் சொந்த வீடு கட்டிட்டு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டேன்.
ஏன்னா வீடு இல்லாம நாங்க வந்து அவ்ளோ கஷ்டப்பட்டோமா அந்த வீடு எவ்வளவு முக்கியம் அப்படிங்கிறது எனக்கு எப்ப  தோணுச்சுன்னா  கொரோனா காலத்துல வீட்ல  வேலை பார்க்கும் போது வீட்டில் டேபிள் வைக்கிற இடம் இல்லாம நான் வந்து ஹாஸ்டல்ல புதுக்கோட்டையிலேயே ஹாஸ்டல்ல தங்கி கிட்டு சனிக்கிழமை சனிக்கிழமை தான் வீட்டுக்கு போவேன் .
.ஒரு வீடு இல்லாம நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் என்பதை அப்பத்தான் உணர்ந்தேன் .வீடு கட்டிட்டு தான் கல்யாணம் என்றத நான் வந்து முன்னாடியே சொல்லிட்டேன் 
இப்போ வீடு கட்டிட்டு இப்ப சொந்த வீட்ல இருக்கோம்மா எங்கள சுத்தி ரொம்ப நல்லவங்க இருக்காங்க அம்மா .
நான் அரசு பள்ளியில் படிச்சிட்டு வேலையில காலேஜ்ல சேரும்போது இங்கிலீஷ் பேச கஷ்டமா இருக்குமென்று கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஆனா என்கூட இருந்த ரூம் மேட்ஸ் எல்லாம் கிளாஸ் விட்ட உடன்ரூமுக்கு வந்த பிறகு  கதவுல எழுதி எனக்கு கற்றுக் கொடுப்பாங்க.
 என் பிரெண்ட்ஸ் கிளாஸ் மெட் எல்லாருமே வந்து எனக்கு ரொம்ப நல்லவங்களா அமைஞ்சாங்கம்மா .எங்க அம்மா சொல்லுவாங்க யாராயிருந்தாலும் அவங்க வந்து 10 கெடுதல் பண்ணாலும் ஒரு நல்லது பண்ணி இருந்தாங்கன்னா அந்த நல்லதைத் தான் நினைக்க வேண்டும்னு.
 நான் வந்து எப்பவுமே நெனச்சு பாப்பேன் குறைய நினைச்சு பார்க்கிறதில்லம்மா யார்ட்டயுமே நல்லதை நினைச்சுகிட்டு பழகுகிறேன் என்று  அந்த குழந்தை முகமுழுக்க சந்தோஷத்தோட, கண்கள்ல ஒரு ஒளியோட அவ சொன்னப்ப மனசு நெகழ்ந்து  நான் உட்கார்ந்திருந்தேன் .
இதைத்தானே எதிர்பார்த்தோம். இதுக்காகத்தானே நாம் ஆசிரியராக இருக்கோம்னு  ஒரு நெகிழ்வான ஒரு தருணமாக நேற்றைய மாலை அமைந்தது.
 அகரம் சூர்யாவுக்கு எனது மனம் நிறைந்த நன்றியை சொல்லிக்கிறேன் என் குழந்தையை கல்லூரியில் படிக்க உதவி செய்து நல்லா வந்து நீங்க கொண்டு வந்துட்டீங்க .
 நிச்சயமா ஒரு நல்ல வழிகாட்டியாக நிறைய பேருக்கு அவ  ஒரு ஆலமரமா இருந்து வழி காட்டுவாள் என்ற நம்பிக்கை இருக்கு எனக்கு
 வாழ்க்கை இனிதுதானே

No comments:

Post a Comment