Monday, 19 January 2026

வீதி ஜனவரி 2026

இதயங்கள் சங்கமிக்கும்
புதுக்கோட்டை  'வீதி': 
கவிதூவிய கண்ணீரும், 
கரைபுரண்ட அன்பும்..!
*************************

​புதுக்கோட்டையின் மண் வாசனைக்கும், அதன் இலக்கியச் செழுமைக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் எப்போதும்
உண்டு. அந்த அடையாளத்தின் முகவரியாகத் திகழ்வது 'வீதி' இலக்கிய அமைப்பு.

 எளிமையைப் போர்த்திக்கொண்டு, இனிமையான இலக்கியப் பகிர்வுகளால் எழுத்தாளுமைகளை ஒன்றிணைக்கும் இந்த மகத்தான அமைப்பின் 140-வது மாதாந்திரச் சந்திப்பு, இன்று (19-01-2026) திங்கட்கிழமை, புதுக்கோட்டையின் மாலைப் பொழுதை இலக்கியச் சாரலில் நனைத்தது.

​விஜய் பேலஸ் பின்புறம் உள்ள ஆலிப் கல்யாண பிரியாணி உணவகக் கடை மாடியில், குளிரூட்டப்பட்ட அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் இதயங்கள் மட்டும் தமிழால் தகித்துக்கொண்டிருந்தன.

​நிகழ்வின் வாசலைத் திறந்து வைத்து கவிஞர் மலையப்பன் வரவேற்புரை ஆற்ற, கவிஞர் மு.கீதா தேவதா தமிழ் கீதா  தலைமையேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார்.

 கவிஞர் தங்கம் மூர்த்தி  Thangam Moorthy தனது தொடக்க உரையின் மூலம் தனக்கே உரிய பாணியில் இலக்கிய  தீபத்தை தனது அனுபவ வெளிச்சங்களால்  அழகாய் ஏற்றி  வைத்தார்.

 மேடையில் கவிஞர்கள் கா.மாலதி, Malathikalimuthu  முனைவர் மகா சுந்தர், Mahaa Sundar  கீதாஞ்சலி  ஆகியோர் தங்களின் சொற்களால் கவிதை மழை பொழிய, கவிஞர் மைதிலி Mythily S  மாண்ட்டோ கதைகளின் வாசிப்பு அனுபவத்தை ஒரு காட்சிக் காவியமாகவே கண்முன் நிறுத்தினார்.

 கவிஞர் கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan , ‘பராசக்தி’ திரைப்படத்தின் மொழிப் போராட்ட  உணர்வை இன்றைய படைப்புச் சூழலோடு பொருத்தி விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்தினார்.

​ஆனால், இன்றைய மாலைப் பொழுது வீதியின் வழக்கமான கூட்டங்களைக் கடந்து, உணர்ச்சிகளின் சங்கமமாக மாறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அவர் – அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து ஓடி வந்திருக்கும் அன்பின் நதி, கவிஞர் கிரேஸ் பிரதிபா.

​கொடைக்கானலில் பிறந்து, பெங்களூரில் இல்லறம் கண்டு, இன்று அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்தாலும், கிரேஸின் இதயம் எப்போதும் தமிழ் இலக்கியத்தில்தான் துடித்துக்கொண்டிருக்கிறது.

 புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நிதி உதவி செய்ததோடு, தற்போது சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரிய பணியையும்  செய்து வருகிறார்.

பல்லாண்டுகளுக்கு முன்பாக ​மதுரையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் துளிர்த்த அந்தச் சிறு நட்பு, இன்று 'வீதி' அமைப்பின் ஒரு அங்கமாக, ஒரு உடன்பிறந்த சகோதரியாக, உற்ற தோழியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 "புதுக்கோட்டைதான் எனக்குப் புத்துயிர் தருகிறது" என்று அவர் மேடையில் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த காற்று கூட கனத்துப் போனது.

​"இந்த வீதி நண்பர்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? எங்கு இருந்தாலும் உங்கள் அன்பை  நான் மறக்கமாட்டேன்..." ​என்று அவர் தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கண்கள் கசிந்து விம்மிய அந்தத் தருணம், அங்கிருந்த ஒவ்வொருவரையும் கலங்க வைத்தது. நெஞ்சம் நெகிழ வைத்தது.
ஒரு வார்த்தைகூட ஆங்கிலக்  கலப்பில்லாமல் அன்பின் அழகிய தமிழ் மொழியை பகிர்ந்து கொண்டு, சிரம் தாழ்த்தி அவர் நன்றி செலுத்திய மேடைப் பண்பாடு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

எழுத்தால் இணைந்த உறவுகள், இரத்த உறவுகளையும் தாண்டி எவ்வளவு ஆழமானவை என்பதற்கு கிரேஸின் அந்தப் புனிதமான கண்ணீர்த்துளிகளே சாட்சி.

​நிகழ்வின் நிறைவாகப் பேசிய கவிஞர் நா முத்துநிலவன்   கிரேஸ் பிரதிபாவின் சங்கத் தமிழ் போன்ற தூய்மையான அன்பைப் பாராட்டிப் பேசினார். சங்க இலக்கியப் பாடல்களைச் சான்றுகாட்டி, அடர்த்தியான அன்பின், தூய தோழமையின் அந்த உன்னதப் பிணைப்பை அவர் விவரித்தபோது, இலக்கியம் எப்படி மனிதர்களை ஈரமான இதயங்களால் பிணைக்கிறது என்பது மீண்டும் நிரூபணமானது.

​நிகழ்வில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சொக்கலிங்கம், புலவர் கும.திருப்பதி திருப்பதி குமரப்பன் , அசோகன் (எல்.ஐ.சி),எழுத்தாளர் ​அண்டனூர் சுரா Andanoor Sura ,கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,
​கவிஞர்  ஒட்டடை பாலச்சந்திரன் 
​கவிஞர் சோலச்சி Solachy Pudukkottai , கவிஞர் ரேவதி ராம்
​கவிஞர் பாஸ்கர் கோபால் 
​வழக்குரைஞர் சங்கீதா Sangeetha R விதைக்கலாம் அமைப்பின் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக 'விதைக்கலாம்' பாலாஜி நன்றியுரை கூற, ஒரு இனிய அன்பின் ஈரம் கலந்த இலக்கிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

​'வீதி'-யில் விழுந்து, நம் இதயங்களில் நுழைந்து, உறவில் கலந்த உயிராய் மாறிவிட்ட கவிஞர் கிரேஸ் பிரதிபா அவர்களே...உங்கள் அன்பு என்றும் எங்களைச் சூழும்..! இந்தப் புதுகையின்  தோழமை உங்களோடு என்றும் துணை நிற்கும்..!
வீதி'யில் பூத்த இந்த நட்பு, கடல் கடந்தும் புதுக்கோட்டை மண்ணின் ஈரத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 

வாழ்க வீதி..!
 வளர்க தமிழ் நட்பு..!

-பழ.அசோக்குமார்

Saturday, 17 January 2026

பெரியார் குறித்து பெருஞ்சித்திரனார்

அவர் பேசிய பேச்சுகளை 
ஏதென்சு நகரைச் சுற்றிவந்த 
சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது.  

உலகப் பெரும் பேச்சாளர் 
என்று பெயரெடுத்த மெகசுதனிசும்
 பேசியிருக்க முடியாது.  

அவர் சுற்றிய தொலைவைக்
 கிரேக்க மன்னன் அலெக்சாண்டரும்
 சுற்றியிருக்க முடியாது.  

அவர் பிரெஞ்சு மாமறவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர். 

 உருசிய இலெனினைவிடப்
 பொதுமக்களை நேருக்கு நேராகக்
 கண்டு பேசியவர்.

 குருசேத்திரப் பாரதப் போரைவிட
 ஆரியத்தின் மேல் அவர் தொடுத்த போர்
 மிகப் பெரியது. 
 கடுமையானது. 

 வேறு எவரும் தொடுக்க அஞ்சியது. 
 நினைத்துத் தொடை நடுங்கியது"

பெரியார் குறித்து
 பாவலரேறு பெருஞ்சித்திரனார் -
 1971இல் எழுதியது.

Sirpi Rajan முகநூல் பதிவு

Monday, 19 May 2025

நந்தினி அன்னாள்

அகரம் அறக்கட்டளை சூர்யாவிற்கு மனம் நிறைந்த நன்றி 
அம்மா எனக்கு திருமணம் அவசியம் நீங்கள் வரனும் மாணவி நந்தினி அன்னாள் 
கள்ளங்கடமில்லா  அன்பை பாசத்தை அவள் மட்டும் அல்ல அவளது குடும்பமே  அள்ளித்தரும்.
ஆறாம் வகுப்பில் அவள் சேர்ந்த போது அத்தனை குட்டியாக அமைதியான குழந்தையாக வந்து சேர்ந்தாள்.அவளது அப்பா ஒரு மாற்றுத்திறனாளி பள்ளியில் சேர்த்து பத்திரமா பார்த்துக்குங்க என்று கண்கலங்கினார்.
நன்கு படிக்கும் அவள் இரண்டு நாட்கள் வரவில்லை . மூன்றாம் நாள் பள்ளிக்கு வந்த போது அவளது கையில் காயம் இருந்தது" என்னடா இது? எப்படி ஆச்சு.சுடுதண்ணீரைக் கையில் கொட்டிக் கொண்டேன் மா. "அவளது அம்மா மீது கோபம் வந்தது "ஏன்டா நீ மேடை  உயரம் கூட இருக்க மாட்டே,நீ ஏன்  தூக்கும்"அம்மா என்ன பண்றாங்க ? என்றேன்
" அம்மாவால் முடியாதம்மா "
ஏன்டா 
அம்மாவுக்கு போலி யோஅட்டாக்னால அவங்களால எந்திரிச்சு நிக்க முடியாது, தவழ்ந்து தான் வருவாங்க .
"நான் தான் சமையல் எல்லாம் ஹெல்ப் பண்ணுவேன். அதனால அம்மா வந்து தூக்க முடியாதுமா நான் தூக்கும்போது தடுமாறி விழுந்திருச்சு" என்றாள்.
மனசு வேதனையாக இருந்தது ஏனெனில் அவனது அப்பா ஒரு மாற்றத்திறனாளி. அம்மாவும் ஒரு மாற்றத்தினாளி என்பதை கேட்ட போது நல்ல வேளை குழந்தைகள் இருவரும் நல்லா பிறந்துட்டாங்க என்று நிம்மதி ஒரு நிமிடம் வந்தது.
 இந்த குழந்தை எப்படியாவது நல்லபடியாக படித்து முடித்து வேலைக்கு வந்து விட வேண்டும் ,அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இன்று செயலாக அவள் செய்யும் பொழுது மனம் நிறைவாக இருக்கிறது.
இன்று அவள் வேலைக்குச் சென்று அவளது ஊதியத்தில்  ஒரு வீடு கட்டி அதில்  அம்மாவையும் அப்பாவையும் வைத்து பார்த்துக் கொள்வது பெருமையைக் தந்தது.
மேலும் அவளது தங்கை ஹெலன்  விளையாட்டில் மிக ஆர்வமாக இருப்பாள் . அவளும் அகரம் அறக்கட்டளை மூலம் படித்து இன்று அவளும் பணிக்கு செல்கிறாள் .
இரண்டு பெண் குழந்தைகள் தங்கள் குடும்பத்தை தாங்க கூடிய காட்சியை கண்முன் காண்கின்றேன்.
 நேற்று அவள் திருமண அழைப்பிதழ் வைக்க நேரில் தான் வருவேன் என்று அடம் பிடித்து வீட்டுக்கு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
 அம்மா ,எங்க அப்பா ரொம்ப நல்ல அப்பா.   என்னைய வந்து பொம்பள பிள்ளை அங்க போகக்கூடாது எங்கே போகககூடாது என்று சொன்னதே இல்லம்மா. மூணாவது படிக்கும் போதே இருக்கும்போதே கையில முறுக்கு பாக்கெட்  கொடுத்துட்டு வா அப்படின்னு சொன்ன அப்பா.
 பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இப்படி சின்னப் புள்ளய அனுப்புறிங்கன்னு கேட்டப்ப கூட ,அதெல்லாம் அவ போயிட்டு வருவாங்க தைரியமா சொன்னாங்க ,
முறுக்கு விக்க ஆரம்பிச்ச பிறகுதான் எங்க வீட்ல கொஞ்சமாவது சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்துச்சுமா.
 அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதே ஒரு பெரிய விஷயம் மா. ஏன்னா எங்க அம்மாவுக்கு 30 வயசு ஆயிடுச்சு அம்மாச்சி மட்டும்தான் துணைக்கு .அம்மாச்சிக்கு பிறகு பார்த்துக்கொள்வதற்கு ஆள் இல்லயேன்னு  அம்மாச்சி கவலைப்பட்ட பிறகுதான் திருமணத்திற்காக விளம்பரம் கொடுத்திருக்காங்க .
அதை அப்பா படித்து விட்டு கஷ்டப்படுறாங்க போலன்னு நினைத்து 100 ரூபாய் பணம் அனுப்பி இருக்காங்க.  அதை வாங்கிய அம்மா "பணமா நாம கேட்டோம் ?நம்ம திருமணம் பண்ணிக்க தானே  விளம்பரம் கொடுத்தோமென  வருத்தப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பி இருக்காங்க .
திருப்பி அனுப்புன பிறகு தான் அப்பா வந்து அம்மாவ பாத்து திருமணம் செஞ்சிருக்காங்க. அப்பா வந்து கிருத்தவரா இருக்கறதுனால அம்மா இந்துவா இருக்கறதுனால அவங்க அப்பா வீட்ல யாருமே ஒத்துக்கல .அதனால அப்பா மட்டும் தனியா வந்து அம்மாவை கல்யாணம் பண்ணி இருக்காங்க.  அன்னைக்கு சொந்தக்காரர்கள் யாரும் இல்லம்மா ..இன்னைக்கு எல்லாரும் வந்துருப்பாங்களேடா . ஆமாமா இன்னைக்கு எல்லாரும் வந்திருக்காங்க நடுவுலயே வந்துட்டாங்க கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணாங்கம்மா .எங்களை சுத்தி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க மா.
அதனால நாங்க வந்து இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம் . நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க அகரம்  தான் காரணம் மா.படிப்பு மட்டும் தான் மா நமக்கு துணை.படிச்சா போதும்னு புரியுது மா.
அகரம் வந்து எனக்கு வாழ்க்கையை வந்து எப்படி புரட்டி போட்டுச்சுங்கறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா. அகரம் மட்டும் இல்லன்னா நானெல்லாம் வந்திருக்கவே முடியாதுமா இது மாதிரி. நான் கூட பரவாயில்லை அம்மா இருக்கிறதுக்கு இடம் இருக்கு அப்பா அம்மா இருக்காங்க .ஆனா என்ன விட ரொம்ப கஷ்டப்படுற புள்ளைங்க அகரத்தினால படிச்சு இன்னைக்கு மேல வந்திருக்காங்க .சொந்தமாக வீடு வாங்கி இருக்காங்க .குடும்பத்தை பார்த்துக்கிறாங்க  அகரம் அறக்கட்டளை அவ்ளோ செஞ்சுகிட்டு இருக்காங்க அதனால நான் வந்து இப்ப வர்ற புள்ளைங்களுக்கெல்லாம் நான் கைட் பண்ணிட்டு இருக்கேன் மா என்று சொன்னப்ப அப்படியே கண்ணீர் தழும்பதழும்ப நான் அவளை அப்படியே கட்டிக்கொண்டேன்.
 ஏன்னா  நான் பெற்றெடுக்காதமகள் மாறி அவ முன்னாடி நின்னு  என்னோட எண்ணங்களை  அவள் செயலாற்றுகின்றதை நினைக்கும்போது மனசு ரொம்ப பெருமையாவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .
. இப்படி ஒவ்வொரு குழந்தையும் ஒரு அரசு பள்ளியில் படிச்சிட்டு தன்னுடைய குடும்பத்த பார்த்துக்க கூடிய அளவுக்கு வர்றதுன்னா அது தமிழ்நாடு அரசு  பள்ளி ஆசிரியர்கள் அது மட்டும் இல்லாம ,பள்ளி முடித்த பிறகு  தடுமாறி நிக்கிற குழந்தைகளை காப்பாற்றக்கூடிய அகரம் போன்ற அறக்கட்டளைகள்  உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்கன்னு  அப்பப்ப காமிச்சுகிட்டே இருக்காங்க "உண்டாலம்ம  உலகம்" அப்படின்னு முன்னோர்கள் சொன்னது உண்மை.
 இன்னைக்கு அவ சொந்தமா ஒரு வீடு கட்டி ,நல்ல வேலையில் தன்னுடைய குடும்பத்தையும் பார்த்துகிட்டு தனக்கான திருமணத்திற்கான எல்லா செலவையும் அவளே சம்பாரித்து அவளது பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கிறாள்.
மாப்பிள்ளை எப்படி வேண்டும் எனக் கேட்ட அப்பாவிடம், எனக்கு ரொம்ப பணக்காரங்களா வேணாம்பா  யாரா இருந்தாலும் என்னைய புரிஞ்சுகிட்டு நம்ம குடும்பத்தை புரிந்து கொள்ள இருந்தா போதும்னு நான் கண்டிப்பா சொல்லிட்டேன் மா .
மாப்பிள்ளை எப்படி மா நல்ல குணமா என்று கேட்ட போது ராணுவத்துல இருக்காங்க எனக்கு அஞ்சு வருஷமா  தெரியும் நான் சொந்த வீடு கட்டிட்டு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டேன்.
ஏன்னா வீடு இல்லாம நாங்க வந்து அவ்ளோ கஷ்டப்பட்டோமா அந்த வீடு எவ்வளவு முக்கியம் அப்படிங்கிறது எனக்கு எப்ப  தோணுச்சுன்னா  கொரோனா காலத்துல வீட்ல  வேலை பார்க்கும் போது வீட்டில் டேபிள் வைக்கிற இடம் இல்லாம நான் வந்து ஹாஸ்டல்ல புதுக்கோட்டையிலேயே ஹாஸ்டல்ல தங்கி கிட்டு சனிக்கிழமை சனிக்கிழமை தான் வீட்டுக்கு போவேன் .
.ஒரு வீடு இல்லாம நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் என்பதை அப்பத்தான் உணர்ந்தேன் .வீடு கட்டிட்டு தான் கல்யாணம் என்றத நான் வந்து முன்னாடியே சொல்லிட்டேன் 
இப்போ வீடு கட்டிட்டு இப்ப சொந்த வீட்ல இருக்கோம்மா எங்கள சுத்தி ரொம்ப நல்லவங்க இருக்காங்க அம்மா .
நான் அரசு பள்ளியில் படிச்சிட்டு வேலையில காலேஜ்ல சேரும்போது இங்கிலீஷ் பேச கஷ்டமா இருக்குமென்று கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஆனா என்கூட இருந்த ரூம் மேட்ஸ் எல்லாம் கிளாஸ் விட்ட உடன்ரூமுக்கு வந்த பிறகு  கதவுல எழுதி எனக்கு கற்றுக் கொடுப்பாங்க.
 என் பிரெண்ட்ஸ் கிளாஸ் மெட் எல்லாருமே வந்து எனக்கு ரொம்ப நல்லவங்களா அமைஞ்சாங்கம்மா .எங்க அம்மா சொல்லுவாங்க யாராயிருந்தாலும் அவங்க வந்து 10 கெடுதல் பண்ணாலும் ஒரு நல்லது பண்ணி இருந்தாங்கன்னா அந்த நல்லதைத் தான் நினைக்க வேண்டும்னு.
 நான் வந்து எப்பவுமே நெனச்சு பாப்பேன் குறைய நினைச்சு பார்க்கிறதில்லம்மா யார்ட்டயுமே நல்லதை நினைச்சுகிட்டு பழகுகிறேன் என்று  அந்த குழந்தை முகமுழுக்க சந்தோஷத்தோட, கண்கள்ல ஒரு ஒளியோட அவ சொன்னப்ப மனசு நெகழ்ந்து  நான் உட்கார்ந்திருந்தேன் .
இதைத்தானே எதிர்பார்த்தோம். இதுக்காகத்தானே நாம் ஆசிரியராக இருக்கோம்னு  ஒரு நெகிழ்வான ஒரு தருணமாக நேற்றைய மாலை அமைந்தது.
 அகரம் சூர்யாவுக்கு எனது மனம் நிறைந்த நன்றியை சொல்லிக்கிறேன் என் குழந்தையை கல்லூரியில் படிக்க உதவி செய்து நல்லா வந்து நீங்க கொண்டு வந்துட்டீங்க .
 நிச்சயமா ஒரு நல்ல வழிகாட்டியாக நிறைய பேருக்கு அவ  ஒரு ஆலமரமா இருந்து வழி காட்டுவாள் என்ற நம்பிக்கை இருக்கு எனக்கு
 வாழ்க்கை இனிதுதானே

Friday, 19 July 2024

ஆசிரியர் பணி

20.7.1988-20.7.2024

36 வருடங்கள் ஆசிரியர் பணி ஏற்று 37 ஆவது ஆண்டு துவங்குகிறது.
பணி ஏற்கும் போது அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து,அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சியும் 1987 இல் முடித்து  1988 இல் அரியலூர் மாவட்டம் சிறுவளூரில் ஆசிரியராகப் பணி கிடைத்தது.அதற்கும் முன் எங்கள் குடும்ப நண்பராக அதே தெருவில் வசித்த முன்னாள் எம்.எல்.ஏ திருமிகு ஆறுமுகம் அவர்களை அப்பா (அவரது மகள் கண்ணகி என் தோழி )என்று தான் அழைப்பேன்.ஐந்தே வீடுகள் இருந்த தட்டாரத்தெருவில் கடைசி இரண்டு வீடுகள் எங்களுடையது.பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தான் இருப்போம்.

ஒருநாள் கண்ணகி அப்பா கைகள் இரண்டையும் மூடிக்கொண்டு ஒரு கையில் மாப்பிள்ளை ஜாதகம் இன்னொரு கையில் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியர் பணி இரண்டில் எது வேண்டும் மா என்று கேட்டார்.உடனே வேலை தான் வேண்டும் நான் போகிறேன் என்றேன்.இவ போய் அங்கே என்னத்த சொல்லிக் கொடுக்க போறான்னு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க.
பின்னர் ஆறு மாதம் கழித்து சிறுவளூரில் ஆசிரியர் பணி ஆணை வந்தது.
வீடு இல்லைனா பள்ளி என்று இருந்த என் வாழ்க்கை பேரூந்து பயணத்திற்கு மாறிய காலமது.

அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் இருந்த புதுப்பாளையத்திற்கு ஜெயங்கொண்டம் பேருந்தில் சென்று இறங்கி பிறகு இரண்டு கிலோமீட்டர் நடந்து சிறுவளூர் செல்ல வேண்டும்.

1988இல் நான் வாங்கிய முதல் ஊதியம் 
 ரூ320. என்னை பேருந்தில் தனியே அனுப்ப மனமில்லாமல் அப்பா காட்டு வழியாக தினமும் 40 கிமீ பயணித்து காலையில் கொண்டு வந்து விட்டு மறுபடியும் மாலையில் அழைக்க வருவார்கள். டிவிஎஸ் 50 வண்டியில் 3 மாதங்கள் வந்தேன்.பிறகு பேருந்து பயணம் பழகி விட்டது.கீழப்பழுவூரில் பேருந்து கிடைக்காத போது சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் நீண்ட டிப்பர் லாரியில் தான் அப்பகுதி மக்கள் செல்வார்கள்.டிரைவர் கேபினுக்கு ஏறத் தெரியாமல் ஸ்டூல் போட்டு ஏறி பிறகு டயரில் கால் வைத்து ஏறக் கற்றுக் கொண்டேன்.

புதுப்பாளையத்தில் இறங்கியதும் மாணவர்களுடன் வேகமாக இரண்டு கிலோமீட்டர் நடந்து 9 மணி வழிபாட்டு கூட்டத்திற்கு வந்து விடுவேன்.ஒரு பெட்டிக்கடை கூட அந்தக் கிராமத்தில் கிடையாது. மாணவர்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் மருந்து பொருட்கள், அந்த கிராம மக்கள் உரிமையோடு வாங்கி வரச் சொல்லும் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கிளம்பும் என்னை இவளா இப்படி என்று அம்மா கன்னத்தில் கை வைத்து பார்ப்பார்கள்.

இப்போதும் மாணவர்களுக்கு தேவையான மாத்திரைகள் கொண்ட சிறிய பர்ஸ் எனது கைப்பையில் இருக்கிறது.
சிறுவளூருக்கு இப்படி போக வேண்டும் என்றால் அடுத்து மாறுதலான பளிங்காநத்தம் பள்ளிக்கு பேருந்தே அதிகமாகக் கிடையாது காட்டாறு ஓடும் அந்த சாலையில் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.அப்பகுதியில் 1990 முதலில் டிவிஎஸ் 50 ஓட்டிய பெண் ஆசிரியர் நான் தான். பிறகு மேலப்பழுவூர் பள்ளியில் 13 ஆண்டுகள்.இப்போதும் அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் உரிமையோடு பேசுகிறார்கள் என்பதே நான் மாணவர் மனதில் இருக்கிறேன் என்ற நிறைவைத் தருகிறது.

காலம் சிமெண்ட் ஆலைப்புகை ஒவ்வாமை காரணமாக 2002 சனவரியில் புதுக்கோட்டை மழையூருக்கு வர வழைத்தது. 
அங்கிருந்து 2005 இல் இப்போது பணிபுரியும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2005 ஜூலை 6 ஆம் தேதி வந்தேன்.காலம் நிறைய அனுபவங்களை இந்தப் பணியில் தந்து பக்குவப்படுத்தி உள்ளது.
 மாணவர்களிடம் இருந்து தினம் தினம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

ஆசிரியராக இருந்த என்னை அம்மாவாக தத்தெடுத்து கொண்ட பவித்ரா எனக்கு சிறப்பு குழந்தைகளை எப்படி நேசிப்பது என்பதை கற்றுக் கொடுத்தாள்.நிறைய அனுபவங்கள் என்னை செதுக்கி உள்ளன.
2017 இல் புதிய பாடத்திட்டக்குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி,2022 இல் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் அயல்நாட்டு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி அனுபவங்கள் மறக்க முடியாத நினைவுகள்.

37 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன் இப்போதும் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவியாக...
மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியராக வாழ்வதே நிறைவாக கருதுகிறேன்.

Friday, 3 May 2024

ஹீரா மண்டி

ஹீராமண்டி தி டைமண்ட் பஜார்


 தொலைக்காட்சித் தொடர் 
இந்தி மொழியில்2024  மே 1 அன்று வெளியானது.


இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி
200 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவாபுகள் தங்களின் சந்தோஷத்திற்காக பெண்களை விலைக்கு வாங்கி பயன் படுத்தி கொள்ளும் இடம் தான் ஹீரா மண்டி .
இக்கதை சுதந்திர போராட்டக் காலத்தில் லாகூரில் நடந்த உண்மையைத் தழுவியது.
 ஹீராமண்டி  அரண்மனையின் ராணிமல்லிகாஜானாக மனீஷா கொய்ராலா  அட்டகாசமாக நடித்துள்ளார்.கம்பீரமான ராணியாக  அவள் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிந்தவளாக இறுதியில் தனது மகளுக்காக அவள் அடையும் மரணவேதனை என கலக்கி உள்ளார்.
அவளது ஆண் குழந்தையை அவளது அக்கா விற்றுவிட்டு நீ வயிற்றில் சுமந்த தை நான் கழுத்தில் சுமக்கிறேன் என்று கூறும் காட்சி விலைமாதுக்களின் வலியை உணரவைக்கிறது.அங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்பதை கூறும் காட்சி கொடுமை.
தனது அம்மாவை சித்தி மல்லிகா கொன்றதற்கு பழி வாங்கத் துடிக்கும் ரெஹானாவாக- சோனாக்ஷி சின்ஹா அற்புதமாக நடித்துள்ளார்.தங்களைப் பயன் படுத்தி கொள்ளும் ஆங்கிலேயர்களின் உதவியோடு சித்தியின் அரண்மனை ஆட்சியைத் தகர்த்து பழிவாங்க முற்படுகிறார்.
மல்லிகா ஜானின் மகள் பிபோஜானாக அதிதி ராவ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புரட்சியாளர்களுக்கு உதவி செய்து இறுதியில் மரணதண்டனை ஏற்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்து உள்ளார்.
மல்லிகாஜானின் இரண்டாவது மகள் ஆலம்ஜானா ஷர்மின்ஷேகல் நடித்துள்ளார்.வேசிகளின் உலகத்தில் ஒரு கவிஞராக வாழ ஆசைப்படும் கனவு நிறைவேறாத ஒன்றாகவே உள்ளதை தனது நடிப்பால் நம்மிடம் கடத்திவிடுகிறார்.

,சஞ்சீதா ஷேய்க் முதற்கொண்டு பலர் நடித்திருக்கும் இந்தத் தொடரில் அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஹீரா மண்டி பெண்களின் உலகம் நவாப்களின் வருகையால் வளமிக்கதாக உள்ளது.
வேசிகள் என்று சமூகத்தால் அழைக்கப்படும் அவர்களின் உலகத்தைக் கண்முன் காட்டுகிறது.
அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்டாலும் இந்த சமூகம் அவர்களை வேசியாகவே எண்ணும் நிலையில் அவர்களின் தூய்மையான காதலும் புறந்தள்ளப்படுகிறது.


பிரிட்டிஷ் அரசு ஆட்சி காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது வரலாற்றில் புறந்தள்ளப்பட்ட பெண்களின் பங்களிப்பிற்கு இந்தத் தொடர் நியாயம் செய்து உள்ளது.

விலைமாதுகளின் வலி நிறைந்த உலகம், நவாபுகள் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டு செய்யும் கொடுமை,சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு இவற்றை மையமாகக் கொண்டு படமாக்கிய விதம் சிறப்பு.

பாடல்கள் அருமை தொடர் முழுவதும் இழையும் சோக இசை பெண்களின் துயர மூச்சாக ஒலிக்கிறது.எடிட்டிங் மிக அருமை எந்த இடத்திலும் தொய்வில்லாத  தன்மை.
தொடர் தானே என்று இல்லாமல் மிகுந்த பொருட்செலவில் அக்காலத்தை கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.

மெழுகுவர்த்தின் ஒலியில் சில காட்சிகள் கண்களைவிட்டு அகல மறுக்கின்றன.

அனைவரும் காண வேண்டிய ஒரு தொடர் HEErRAMANDI

Monday, 4 March 2024

சிற்றலை மீதமர் தும்பி கவிதை நூல்

ரேவதி ராம் எழுதிய " சிற்றலை மீதமர் தும்பி" கவிதை நூல் விமர்சனம்.
தும்பி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எந்த வயதிலும் தும்பியைப் பார்த்தால் ஆசையாகத் தொட ஓட வைக்கும் இக்கவிதைகளைப் போல.
மனம் வறண்ட பாலைநிலத்தில் மழைத்துளியென ஒரு சொல் போதும் வனமாகிவிடுவேன் என்ற கவிதை சொல்லாலே வாழ்கிறது இவ்வுலகு என்பதை உணர்த்தும் கவிதை.
" காய்ந்து கருவேறிய
மரமாய் நிற்கும்
என்மனம்.
ஒவ்வொரு பட்டையாய் உதிர
உன் மொழி கேட்டு.
பச்சை வாடை கிளம்பி
முத்திரை ஒன்று உள்ளுக்குள்
துளிர்க்கத் தொடங்கியுள்ளது."
இருந்ததையும் இன்மையையும் ஒன்றாய் பார்க்கும் ஜென் தத்துவக் கவிதைகள் பல உண்டு.வீழும் சருகின் நினைவலைகள் தரை இறங்காமலே நினைவுகளுடன் ஏ வாழ வைக்கும் கவிதையாக.
கருத்துச் சுதந்திரம் அற்ற இந்த நாட்டில் கடவுளைப் பற்றி எழுதினால் கைது நிச்சயம் என்பதைக் கூறும் அரசியல் கவிதையாக
" ஆமாம்
எழுத வேண்டும்
கவிதைதான்
கடவுளைக் குறித்துத் தான்
பேனாவைப் பிடிக்கையில்
சிறு சந்தேகம்
கைதாகப் போவது
நானா?
சொல்லா?"
சொல்லைத் தாங்காது கைது என்ன? சொல்லிற்காக உயிரைக் கொடுத்த கௌரி சங்கர் போல பலரைக் கண்முன்னே வரவழைத்த கவிதை .
காதலைக் கூறும் பல கவிதைகள் மிக அருமை.
பல கவிதைகளைக் குறியீட்டுக் கவிதைகளாக உணர முடிகிறது.
" நீரில் தத்தளித்த
சிற்றெறும்பிற்காக
ஒற்றை இலையை
உதிர்க்கிறது
பெருமரம்".
இது பேரன்பால் கரம் கொடுத்து துயரங்களைத் துடைக்க முயலும் கவிதையாகிறது.
எது சாமி? எனக் கேள்வி கேட்கும் கவிதைக்கு பதிலைத் தான் உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது.
வாசிக்கப்படாத கவிதையாக வாழும் கவிஞரின் வாழ்க்கை இசையாக உலகை வெல்லட்டும்.
இசையாக,தும்பியாக,இலையாக,சருகாக,
மரமாக,நதியாக ,என இயற்கையில் கரையும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இலக்கிய மகள் பெறும் புகழை நான் பெற்றதாகவே கருதி எனது மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, 3 March 2024

"கனவின் இசைக்குறிப்பு "நூல் விமர்சனம்

கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்  எழுதிய"கனவின் இசைக்குறிப்பு " கவிதை நூல்.
நூலின் பதிப்புரையும் ,அணிந்துரையும் பேரன்பின் பிரதிபலிப்பு.
இணையரின் கனவை நனவாக்க கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan எடுத்துக் கொண்ட முயற்சிகளையே ஒரு நூலாக எழுதலாம். கரம்பிடித்து இணையரை கவிதை வானில் சிறகடிக்க விட்டு பார்த்து மகிழும் அன்புத் தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
"சிறகுகள் துளிர்க்கும் கனவு" என்ற கவிதையில் துவங்கி
" முடிவும் தொடக்கமும்" என்ற கவிதையில் முடியும் இந்த நூல் முழுவதும் வாசிக்கும் போது ,பின்னணியில் இளையராஜாவின் இசையை உணர்ந்தால் கவிஞரின் வானத்தில் நீங்களும் பறவையாக ஆகமுடியும்.
குழந்தையின் அன்பில் கரைந்த தாய் வளர்ந்த மகளிலும் குழந்தமையை எண்ணித் ததும்பும் தாய்மைக்கவிதை,
இலை , நிலா,பூநாகம் தடாகம்,
அரசியல், காதல், காணும் காட்சிகள்,
தோழியின் நிலை, வண்ணத்துப்பூச்சி, தேநீர்,உறைந்து மீளும் அங்காடி, மனம் வருடும் ஹரிஹரனின் இசை,நட்பு,பதின்மம்,வேங்கை வயல், குளம், செவிலியர், செருப்பு என பற்பல பாடுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு குறியீட்டு கவிதைகள்,படிமக்கவிதைகளை எழுதி உள்ளார்.
சில கவிதைகள் முத்தம் தரும், சில கவிதைகள் வாதை தரும், சில கவிதைகள் வன்மை காட்டும்...எல்லாக் கவிதைகளிலும் மனித நேயம் வாழும்.பெரிதும் நேசிக்கும் படும் தந்தை பெரியாரின் கவிதை.

எனக்கு பிடித்த சில கவிதைகள்
"நரம்புகளில் ஊர்கிறது எறும்பு
சிலிர்த்துக் கொள்கிறது
இலை'
இக்கவிதையைப் படிக்கும் போது நமது நரம்புகள் சிலிர்ப்பதை உணர முடியும்.

"சவாரி குதிரைகளை  வரைவது தண்டனை எனக்கூறும் தோழிக்காக இரங்கும் கவிதையொன்று.
தேநீர் இவரது கவிதைகளில் பல இடங்களில் இடம் பிடிக்கிறது நமது மனங்களிலும்.
அவரது
" அகல் அளவு இதயத்தில்
தேக்கரண்டி சொல் நிறைத்து
நின்றெரியும் சிறு சுடர் _ நீ"
சுடர் பிரகாசமாக எரிந்து பல கவிதைகளுக்கு ஒளி கூட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சாத்தானின் பிள்ளைகளைப் போல கவலையற்று வாழவே நேர்மையான உள்ளங்கள் விரும்பும்..
பரிதவிப்பின் படபடப்பைக் கூறும் கவிதையாக
" செவிமடுக்கத் துணிந்த நொடிக்கு
சிலந்தி வலையில் படபடக்கும்
தும்பியின் சாயல் "சிறப்பானதொரு கவிதை.
நிறைய கவிதைகளால் நமது மனதை நெய்து வலைசெய்து பிடித்து வைத்துக் கொள்கிறார்.
புதுக்கோட்டை இலக்கிய உலகின் இவரது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக..... இந்நூல் " கனவின் இசைக்குறிப்பாக" இசைக்கிறது. 
பேரன்புக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டுச் சிறப்பித்த நூலில் இருந்து,
தீக்கமழும் செங்குருதி,நெகிழி உதடுகள் என பல புதிய பதங்களை முத்தெடுக்கலாம்.
சமூகத்தின் மீதான தீரா அன்பை கவிதைகளாக வடித்து,
கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வானில் தடம் பதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.