Sunday 23 August 2015

பிரேம்சந்த்

வீதியின் இலக்கிய ஆளுமைகளுக்கு இந்த எளியவாசகனின் பணிவான வணக்கங்கள்.
வேடிக்கையாக ஒரு கதை உண்டு. ஒரே ஒரு சிறுகதையை எழுதிய எழுத்தாளார் ஒருவரிடம் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிண்டல் கொப்பளிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.
எழுதுனது ஒரு கத அதுக்கு எழுத்தாளர்னு ஒரு பட்டம்வேறு என்ற அவரது கிண்டலுக்கு மிக அமைதியாக அந்த எழுத்தாளர் சொன்னார்
ஒரே ஒரு புள்ளையப் பெத்தாலும் அப்பன்தான்.
ஆம் நண்பர்களே, ஒரு படைப்பாளின் வாழ்வு அவன் படைப்புகள் நேசிக்கப்படும்வரை நீள்கிறது. படைப்பு ஜீவித்திருக்கும் வரை படைப்பாளனும் ஜீவித்திருக்கிறான் என்பதே உண்மை.
வளரும் கவிதையின் வார்த்தைகளில் சொன்னால் சேலம் அரங்கநாதனின் கவிதை வரிகளை சொல்லாத மேடைகளே இல்லை. வெறும் இரண்டுவரிக் கவிதையின் மூலம் இன்னும் பல நூற்றாண்டு வாழ்வார் அவர்.
ஆக நான் பேச விரும்பிய ஆளுமையை சொல்வதைவிட அவரது படைப்பொன்றைச் சொல்வது முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.
அவரது சிறுகதையின் சாரம் ஒன்றைமட்டும் சொல்கிறேன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவன் ஒரு குடும்பத்தலைவன். அவனது பெண் வயதிற்கு வந்துவிடுகிறாள். அதற்கான சடங்கிற்கு நல்ல நேரம் குறிக்க நினைக்கிறான் அவன்.
பக்கத்து ஊரில் இருக்கும் அக்ரகாரத்தில் தயங்கி தயங்கி நுழைகிறான் அவன். பல புரோகிதர்கள் கைவிட்ட பின்னர் பெரியமனது கொண்ட ஒரு புரோகிதர் அவனுக்கு உதவ முன்வருகிறார். ஆனால் பதிலுக்கு அவர்வீட்டில் உள்ள சில பணிகளைப் பார்த்துதர பணிக்கிறார்.
ஏழைத்தந்தை உழைக்க ஆரம்பிக்கிறார், விறகு உடைக்கிறார், தண்ணீர் பாய்ச்சுகிறார் இன்னும் கடும் உடல் உழைப்பை வேண்டும் அத்துணைப் பணிகளையும் செய்கிறார். தாகம் தொண்டையை வறட்ட கொஞ்சம் நீர் வேண்டுகிறார். அக்ரகாரத்தில் அது நிறைவேறக்கூடிய வேண்டுதலா என்ன.
கருணையோடு அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. கடும் தாகத்தில் மயங்கும் அவர் அப்படியே உயிரிழக்கிறார்.
திகைத்துப் போகிறார் கருணைமனம் கொண்ட புரோகிதர். எப்படி அந்த உடலை அப்புறப் படுத்துவது என்று. தனது நண்பர்கள் ஒவ்வொருவராக இறைஞ்சுகிறார். அவர்கள் இவரை விட காருண்யம் கொண்டவர்கள்.
மறுக்கிறார்கள்.
வேறு வழியின்றி புரோகிதர் அவரே காரியத்தில் இறங்குகிறார். ஒரு நீண்ட கையிற்றை எடுத்து அந்த ஏழைத்தந்தையின் கால்களில் இறுக்கி இழுத்துச் சென்று ஊரின் எல்லையில் உடலைக் கிடத்திவிடுகிறார்.
அந்த உடல் என்ன ஆனது என்கிற ஊகத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இந்தக் கதைதான் எழுத்தாளரை எனது மனதில் சிம்மாசனமிட்டு அமரவைத்தது.
அவர்பெயர் பிரேம்சந்த், அற்புதமான எழுத்தாளர் என்று சமகால எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்டவர் ஆனால் இலக்கியத்திற்கான எந்த விருதும் வழங்கப்படாதவர்.
ஏன் என்பதற்கு பதில் இந்தக் கதையிலேயே இருக்கிறது.
சனாதானத்தை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால் கொலை செய்துவிடுவார்கள். சனாதனத்தை எதிர்ப்பவர்களை கொலை செய்தவர்களுக்கு சிலை எடுக்கும் நாட்டில் வாழ்கிறோம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
1880ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வாரனசிக்கு அருகே இருந்த லமொஹி கிராமத்தில் பிறந்தவர்தான் பிரேம்சந்த். பெரும் நிலக்கிழாரான இவரது தந்தை இவருக்கு செல்வச் செழிப்பை பறைசாற்றும் வகையில் தன்பத் ராய் என பெயரிட்டார்.
தந்தை அஜப் ராய், ஒரு அஞ்சல் அலுவலக கணக்கர். தாயார் ஆனந்தி தேவி. தன்பத்துக்கு முன்னர் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட மூன்றாவதாக பிறந்த சுகி எனும் சகோதரிக்கு பின்னர் நான்காவதாகப் பிறந்தவர் தன்பத்ராய்.
தன்பத்துக்கு ஏழு வயதான போது லால்பூரில் உள்ள மதராஸாவிற்கு அனுப்பப் பட்டார். உருது மொழியையும் பெர்சிய மொழியையும் கற்றுகொண்டார் இவர். தனது எட்டு வயதில் தாயை இழந்தார். சிறிது காலத்திலேயே அப்பா இன்னொரு திருமணம் செய்துகொண்டார். மாற்றாந்தாய் அனுபங்களை பெற்றதும் அவை இவர் கதைகளில் அடிக்கடி வருவதும் இதனால்தான்.
சிறிய வயதில் தாயை இழந்த இவரது கொடும் தனிமைக்கு ஆறுதலாக இருந்தது வாசிப்பு பழக்கம். இது நூல்கள் குறித்த ஒரு பெருவியப்பையும் ஆர்வத்தை கிளறியது.
தனது வாசிப்பு ஆர்வத்திற்காக இவர் ஒரு மொத்த புத்தக விற்பனையாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். பெர்சிய மொழியில் இருந்த திலிஷம்-ஈ-ஹோஸ்ரூபா முதல் எட்டு பகுதிகளாக வந்த ஆங்கில மொழி புத்தகமான The Mysteries of the Court of London வரை மேய்ந்து தீர்த்தார்.
பனாரஸ் ராணியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது இவருக்கு வயது வெறும் பதினைந்து மட்டுமே. அப்போது இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. தன்னை விட வயதில் மூத்த செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இவருக்கு திருமணம் நிகழ்ந்தது.
1897இல் பத்தாம் வகுப்பில் இரண்டாம் வகுப்புடன் (செகண்ட் கிளாஸ்) தேர்ச்சி அடைந்தார்.
பல்வேறு அரசுப் பணிகளில் இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்தாலும் இலக்கிய ஆர்வத்தில் கடனாளியானார்.
ஆரம்பத்தில் தேவர்களின் ரகசியம் என்கிற தனது முதல் படைப்பை இவர் நவாப் ராய் என்கிற பெயரில்தான் எழுதினார். இது கோவில்களில் பூசாரிகளின் ஊழலையும், ஏழைப் பெண்களை நாசப்படுத்துவதையும் பேசியது. விமர்சகர்கள் எழுத்தாளர் ஒரு கத்துக் குட்டி என்று சொன்னார்கள். பிரகாஷ் சந்திர குப்தா பக்குவம் குறைவு வாழ்வை வெறும் கருப்பு வெள்ளையாக பதிவு செய்திருக்கிறது படைப்பு என்றார்.
1905இல் மூத்த மனைவி இவரைப் பிரிய, ஷிவராணி தேவி என்கிற விதவையை மணந்தார். இது இவரது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்த கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மீண்டும் பாபு ராய் பனாரசி என்கிற பெயரில் எழுதத் தொடங்கினார். கோபால கிருஷ்ண கோகலேயின் வழிமுறைகளை விமர்சித்த இவர் திலகர் வழியில் தீவிரமாகப் போரிடவேண்டும் என்ற கருத்துடையவர். இதை வலியுறுத்தி உலகின் விலைமதிப்பற்ற ரத்தினம் எனும் கதையை எழுதினார்.
விடுதலைக்காக சிந்தப்படும் கடைசித் துளி ரத்தமே உலகின் விலைமதிப்பற்ற இரத்தினம் என்றது கதை.
1909இல் முதல் முதலில் பிரேம்சந்த் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். ஏன் எனில் சாஸ்-இ-வதன் என்கிற இவரது படைப்பு பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டது. மேலும் பிரச்சனைகளை வளர்க்க விரும்பாத இவர் தந்து பெயரி பிரேம்சந்த் என மாற்றிக்கொண்டார்!
1919இல் நான்கு குறுநாவல்களை வெளியிட்டார். இதே ஆண்டு தனது முதல் நாவலான சேவாசதனை வெளியிட்டார்.
1921இல் மகாத்மாவின் ஒரு கூட்டத்தில் ஒத்துழையாமை இயக்க வேண்டுகோளைக் கேட்டார். இரண்டு குழந்தைகளுடன் கர்ப்பிணி மனைவியையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் தன்னை வாட்டிக்கொண்டிருந்த நோயைக்கூட பொருட்படுத்தாமல் தனது பணியைத் துறந்தார்.
வண்ணங்களின் உலகம் (ரங்பூமி) என்கிற நாவலில் சூர்தாஸ் என்கிற குருட்டு பிச்சைக்காரரை கதாநாயகனாக எழுதியிருந்தார். 1925இல் வெளிவந்த நிர்மலா தொடர்ந்து 1927இல் வெளிவந்த பிரதிக்யாவும் இவருக்கு விமர்சகர்களின் உலகில் மரியாதையை பெற்றுத்தந்தன.
திரையுலகிலும் சிலகாலம் பணிபுரிந்தவர் பிரேம். அஜந்தா சினிடோன் என்கிற நிறுவனத்தில் திரைக்கதை எழுத வருடம் எட்டாயிரம் என்று ஒப்பந்தம் போட்டார். ஆனால் ஓராண்டுக்கு முன்னரே பாம்பேயை விட்டு வெளியேறினார்.
செல்வச் செழிப்பில் பிறந்த இவர் இலக்கியப் பாதையில் பயணித்து கடும் கடனாலும் வாட்டும் நோயாலும் வாழ்நாளெல்லாம் சிரமப்பட்டார். ஜாகரன் என்கிற பத்திரிக்கையை நடத்திய இவர் அதற்கான நிதி உதவியைக் கேட்டு எழுதிய கடிதத்தின் ஒரு வரி "ஒரு பைத்தியக்காரன் மார்பிலே கட்டிக்கொண்ட தகர டப்பாவை அடித்துக் கொண்டிருப்பது போல் நான் ஜாகரன் இதழை நடத்திக் கொண்டிருக்கிறேன்." இவர் அடைந்த வேதனைகளைக் கூற வேறு சாட்சியங்கள் தேவையா என்ன?
பிரேம்சந்த்
இன்று இயல்பு வாழ்வின் பரிணாமங்களைப் படம்பிடித்தவர், போலித்தனமான குருட்டு நம்பிக்கைகள் எப்படி ஒடுக்கப்பட்டோர் வாழ்வினைப் பாதிக்கிறது என்பதை கதைகள் மூலம் சொன்னவர் என்று நினைவுகூரப் படுகிறார்.
இவர் செய்யத் தவறியவை
மேற்குலகின் இலக்கிய ஆளுமைகளோடு பழக்கம் இல்லாதது, மேற்குலகுக்கு ஒருமுறைகூட பயணிக்காதது. இந்த இடத்தில் தாகூருக்கு எப்படி நோபல் கிடைத்து என்று நாம் பார்க்கவேண்டியது அவசியம்.
W.B.யேட்ஸ் தாகூரின் கவிதைகளை ஒரு தேநீரகத்தில் வாசிக்கிறார். வெளிப்படையாக சொல்கிறார் "மேற்குலகில் நாம் எழுத்தின் மூலம் பொருளீட்டுகிறோம் அத்துடன் திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் தாகூர் ஆன்மாவில் இருந்து எழுதியிருக்கிறார்."
இப்படி போகும் இடமெல்லாம் அவர் கீதாஞ்சலியை கொண்டாடி நோபலுக்கு வழிவகுத்தார்.
இன்று நாம் பீற்றிக் கொள்ளலாம் பிரான்சின் ரயில் பெட்டிகளில் திருக்குறள் மின்னுகிறது என்று . அது அங்கே எப்படிப் போனது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
முதலில் ஆங்கிலத்துக்கு போனது பின்னர் அது அகிலத்தின் சொத்தானது. தமிழருக்கு குறளின் மீது உள்ள மரியாதையைவிட அகிலத்தின் பிற பகுதியில் இருக்கும் மனிதர்களால் மதிக்கப்படுகிறது.
வீதி இலக்கியக் களம் படைப்பாளர்களையும் படைப்புகளையும் ஆவணப் படுத்துவது அவசியம். இதற்கான ஒரு இயக்கத்தையும் அது ஆரம்பிக்க வேண்டும்.
அதே போல் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதன் மூலம் ஒரு சர்வதேச தளத்திற்கு அவற்றை கொண்டுசெல்ல வேண்டிய பணியையும் அது செய்ய வேண்டும்.
மூலம் :
படைப்பாளர்களின் குழந்தைப் பருவம் நமக்கு அவர்களின் படைப்புலகு எப்படி எழுகிறது என்பதை காட்டும்.

சிறிய வயதிலேயே தாயை இழந்து தன்மையில் இருந்த தன்பத் தீரா வாசிப்பு தாகத்தை வளர்த்துக் கொண்டார். பல்வேறு உலக இலக்கியங்களை ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்தார்.
எஸ்.ராவின் பிரத்தியோகக் கவர்ச்சி ஆங்கில இலக்கியத்தில் இருந்து வருகிறதைப்போல், கவிக்கோவின் மந்திர வரிகள் அரபு இலக்கியத்தில் ஊறியிருப்பதைப்போல் பிரேம் தனது படைப்புக்கான மூலங்களைப் பெற்ற இடம் முக்கியமானது.
அது அவரது ஏழுவயதில் அவருக்கு அறிமுகமான மதரசா கல்வி! ஒருவேளை சனதானக் கல்வி முறையில் தன்பத் படித்திருந்தால் நமக்கு பிரேம்சந்த் கிடைக்காமலே போயிருக்கலாம்!
இவ்வளவு நேரம் பொறுமையாக எனது உரையைக் கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு பணிவான வணக்கங்கள், வாய்ப்புத் தந்தற்கு நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்பன்
மது

பி.கு : எனக்கு பின்னும் முன்னுமாக பெரும் ஆளுமைகள் பேசியும், சிலர் பேசக் காத்துக் கொண்டிருந்ததால் சுருக்கி விட்டேன்.


No comments:

Post a Comment