Wednesday, 4 January 2017

வீதி கலைஇலக்கியக்களம் -34



                                                                      வீதி
                                                  கலை இலக்கியக்களம்-34
 நாள்:25.12.16
இடம் :ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி.புதுகை

வரவேற்புரை :

கவிஞர் சோலச்சி தனது கவியுரையால் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் ,அனைவரையும் வரவேற்றவிதம் சிறப்பு.

அஞ்சலி :

முன்னாள் முதலமைச்சர் செல்வி .ஜெயலலிதா அவர்களுக்கும்,கவிஞர் இன்குலாப் மற்றும் இசைவேந்தர் பாலமுரளிக்கிருஷ்ணா ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமை:கவிஞர் ரேவதி


மகிழ்ச்சியை வெளியில் தேடாதீர்கள் அது உங்களுக்குள்ளேதான் இருக்கின்றது என்னும் கருத்தை ஒரு கதை மூலம் கூறி நிகழ்வை சிறப்பாகத்தொடங்கி வைத்தார்.

பாடல்:

கவிஞர் முருகதாஸ் இன்குலாப்பின் மனுசங்கடா பாடலை கீழ்வெண்மணி நினைவுநாளுக்காக சமர்ப்பித்தார்.

கவிஞர் பவல்ராஜ் அத்தமகனே அத்தானேஎன்ற கிராமியப்பாடலை இசையுடன் பாடிய விதம் மிக அருமை.

கவிஞர் மாலதியின் பள்ளி மாணவி குழந்தைப்பாடகர் வெர்ஜின் அழகே அழகு பாடலைப்பாடி அசத்தினார்.

கவிஞர் வைகறையின் பள்ளி மாணவி எவனோ ஒருவன் வாசிக்கிறான்என்ற பாடலை இனிமையாகப்பாடி நிகழ்விற்கு மெருகூட்டினார்.

கவிதை






கவிஞர் நாகநாதன் மரங்கள்”,மற்றும் மேலும் சில கவிதைகளைப்படைத்தார்.

கவிஞர் பாரதி ஏகலைவன்திருநங்கை,நான் கிறுக்கன்,நான் சொல்லுறத கேளுங்க என்ற தலைப்பில் கவிதைகள் வாசித்தார்.

கவிதை:கருப்பையா தலைமை ஆசிரியர் பொன்னமராவதி
வெள்ளைப்பணம் வைத்திருப்பவர்கள்,வெயிலில் நிற்கவேண்டும் ஏன்
என்பது போன்ற கேள்விகளைக்கொண்ட கவிதையை வாசித்தார்.

 கவிஞர் சிவக்குமார் கீற்ருக்குள் கருகின நாற்றுக்க”,நான் சொல்லுறத கேளுங்க,”ஆகிய கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் காசாவயல் கண்ணன் அப்போ நீட்டா எழுதுனா பாசு,இன்று நீட் எழுதுனா தான் பாசு ,போன்ற அருமையான குறுங்கவிதைகளை வாசித்து நிகழ்வினை சிறப்பித்தார்

கவிஞர் சாமியப்பன் எதிர்த்து கேட்க வேண்டிய எல்லோரையும்,வரிசையில் நிற்க வைக்கின்றது அதிகாரவர்க்கம்.என்ற கவிதையையும்

கவிஞர் பாரதிச்செல்வன்கருப்பு பண முதலைகளை பிடிக்க வலை விரித்தார்கள்என்ற கவிதையையும்,

எழுத்தாளர் செம்பை மணவாளன்காதல்ரசம் சொட்டும் கவிதையையும்,

வீதியில் விருந்தாக அனைவருக்கும் அளித்து மகிழ்ந்தனர்.

நூல் விமர்சனம்

கவிஞர் கூரா.அம்மாசையப்பனின் ஞாபகநடவுகள்வளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூலின் சிறப்புகளை கூறிய விதம் அருமை.

ஏற்புரை

கவிஞர் கூரா .அம்மாசையப்பன் தனது ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி கூறி அவர் ரசித்த கவிதைகளையும்,கவிதையின் தன்மைகளையும் .
அவர் பணிபுரியும் இரும்பு உருக்காலையில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனமகிழ் முத்தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளையும்,அம்பறா என்ற சிற்றிதழ் குறித்தும் மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.
வீதி சாதிக்க நினைப்பவர்களின் சங்கமம் என்று பாராட்டினார்.

கட்டுரை

நிருபர் ம.மு.கண்ணன் அவர்கள் ஆரோக்கியம் குறித்த இயற்கை உணவுகளைக்குறித்த ஒரு கட்டுரையை படைத்தார்.

சிறப்பு விருந்தினர்.








கவிஞர் அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர்.

கவிஞர் நாகநாதனின் மரம் குறித்த கவிதையைப்பாராட்டி,அவர் எழுதிய மரம் குறித்த கவிதையை வாசித்தார். புதுக்கோட்டையின் சிறப்புகளை சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டினார்.
விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும் .திறனாய்வு செய்யும் போது எதைப்பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியது மிகச்சிறப்பு.

சிறப்பு நிகழ்வு

கவிஞர் கீதா பேலியோ டயட் குறித்த சிறு அறிமுகம் செய்தார்,வீடியோக்காட்சியும் காட்டப்பட்டது.

நன்றியுரை

கவிஞர் முருகதாஸ் நன்றி கூற வீதிகலைஇலக்கியக்களம் சிறப்பாக முடிந்தது.

நிகழ்வை திட்டமிட்டு சிறப்பாக செய்த அமைப்பாளர்கள் கவிஞர் சோலச்சி,கவிஞர் முருகதாஸ் ஆகியோரை வீதி பாராட்டி மகிழ்கின்றது.








Wednesday, 21 December 2016

வீதி-34 அழைப்பிதழ்

                                                            வீதி
                                   கலை இலக்கியக்களம்
                                                 கூட்டம்-34
நாள்:25.12.16

இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுகை
புதிய பேரூந்து நிலைய மாடியில்]

காலம்:காலை 9.03.-1.00

காலை 9.30 மணி அளவில் ஆரோக்கிய உணவு குறித்த வீடியோக்காட்சி

நிகழ்வுகள்

பாடல்,கவிதை,கதை,கட்டுரை,நூல் விமர்சனம்[ஞாபக நடவுகள் கவிதை நூல்].

சிறப்பு விருந்தினர்கள்

கவிஞர் அன்னக்கொடி ஸ்ரீவில்லிப்புத்தூர்.

வளரி இதழின் ”கவிப்பேராசான் மீரா” விருது பெற்றுள்ள ”ஞாபக நடவுகள் “நூலாசிரியர் கவிஞர் கூரா அம்மாசையப்பன். சேலம்.

.மேலும் சிறப்பாக

சர்க்கரை, உடல் எடை, தைராய்டு,மூட்டு வலியை இரத்த அழுத்தம்,கொழுப்பு,மகளிர் தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக..உணவுமுறையில் மட்டுமே சிறிது மாற்றம்[பேலியோ டயட்]

அதிக செலவில்லை…ஆனால் பலனடைந்தோர்..தங்களின் அனுபவங்களை கூறுகின்றனர்.. அவசியம் வருக….ஆதாயம் இல்லை …அக்கறையால் அழைக்கின்றோம்.

அமைப்பாளர்கள்

கவிஞர்கள்
சோலச்சி 9788210863,
முருகதாஸ்..9443824331
 
                                                                                                                 அன்புடன்
                                                                                                                 கீதா 9659247363



Sunday, 11 December 2016

வீதி கலை இலக்கியக்களம்-33

வீதி கலை இலக்கியக்களம்-33

இம்மாத வீதிக்கூட்டம் 27.11.16 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது.இம்மாதம் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு வீதியாக நிகழ்ந்தது.
வரவேற்புரை:”விதைக்கலாம்”பாலாஜி அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

தலைமை:கவிஞர் அமிர்தா அவர்கள் தலைமையேற்று வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்.




பாடல்:கவிஞர் முருகதாஸ்[மாட்டைப்பற்றி பாடிய விதம் மிகச்சிறப்பு],பாவலர் பொன் .கருப்பையா,கவிஞர் மாலதி ஆகியோர் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்தனர்...

கவிதை:கவிஞர் சிவக்குமார்,கவிஞர் செல்வா,கவிஞர் பவல்ராஜ்,கவிஞர் செம்பை மணவாளன் ஆகியோர் கவிதை வாசித்து வீதிக்கு மெருகூட்டினர்.

நூல் விமர்சனம்:எழுத்தாளர் பாலபாரதியின்:ஆட்டிசம் பற்றி சில புரிதல்கள் “என்ற நூலை கவிஞர் சோலச்சி அறிமுகம் செய்து அவரது ஆசிரியப்பணியில் சந்தித்த ஆட்டிசம் குழந்தைகளின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சிறுகதை:கவிஞர் இந்துமதி ஆட்டிசம் பெற்றொரின் சிக்கல்களை கதையாக பின்னியிருந்த விதம் மிக அருமை.

கட்டுரை:கவிஞர் ரேவதி 
ஆட்டிசம் குறித்த விரிவான,தெளிவான,புள்ளிவிவரங்களுடன் மிகவும் ஆழ்ந்து கட்டுரையை தந்த விதம் அவரது இலக்கியப்பணியில் உள்ள முன்னேற்றத்தைக்காட்டியது..அனைவராலும் பாராட்டப்பட்டது.
காணொளிக்காட்சி:ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஒரு வீடியோ கிளிப்பிங் காணொளிக்காட்சியாக பாலாஜி படைத்தார்.




















சிறப்பு விருந்தினர்
பேராசிரியர் டாக்டர் .பிரபாகர் இம்மானுவேல்..M.Sc,M.Phil,M.S.Ed[USA],M.Phil,Ph.d.
திருச்சி ஹோலிக்கிராஸ் சர்வீஸ் சொசைட்டியின் இயக்குனர்.
  35க்கும் மேற்பட்ட நூல்களை சிறப்புக்குழந்தைகள்/மாற்றுத்திறனாளிகளுக்காக  எழுதியுள்ளார்.
மூவாயிரம் குழந்தைகட்கு மேலாக தனது துணைவியாருடன் சேர்ந்து பயிற்றுவித்துள்ளார்.அவர்களும் கூட்டத்தில் காந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.
கீரனூர் மற்றும் பிற ஊர்களில் இக்குழந்தைகளுக்காக பயிற்சி அளித்து வருகின்றார்.
புதுகையிலும் இடம் தந்தால் இங்கிருந்து திருச்சிக்கு வரும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவரது ”தாய்மை மற்றும் குழந்தை வளர்ச்சி “என்ற நூல் ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளைத்தாங்கி உள்ளது.குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூலாக உள்ளது.
சிறப்புரை
சமுதாயத்திற்கு பயன்படும் செயல்களைச்செய்யும் போது குழந்தைகளைப்பற்றி யாரும் நினைப்பது இல்லை.தீர்வற்ற சிந்தனைகளால் பயன் இல்லை.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல...உடற்குறைபாடு என்பதை உணரவேண்டும்.அக்குறை உள்ளவர்கள் தனித்து இருப்பதையே விரும்புவார்கள்.தனியே இருப்பதை ஆட்டோ என்பதால் ஆட்டிசம் என்ற வார்த்தை உருவானது.

வளர்ச்சி பருவக்குறைபாடே ஆட்டிசம் ஆகும்..அறிவுத்திறன் சார்ந்தவை இல்லை.
இதன் தன்மைகள்
*சமூகப்பங்கேற்பு கொள்வது இவர்களுக்கு சிரமமான ஒன்று
*மொழி/தொடர்பு கொள்ளுதல்/பேச்சு ஆகியவை கடினமான ஒன்றாகும்.
*மாறுபட்ட குணாதிசயங்களை கொண்டவராக இருப்பர்.
சிறுவயதிலேயே தற்காலத்தில் செல்லை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் நாளடைவில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான தன்மைகளைப்பெறும் என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியைக்கூறினார். 
மருத்துவம்
இக்குறைபாட்டிற்கு மருந்து இல்லை...ஆனால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவரிடம் காட்டுவதால் அவர்களும் ஊட்டச்சத்து மாத்திரைகளைத்தந்து  உண்மையை கூற மறுக்கின்றனர்.
எனது நண்பர் கூட சிறந்த மருத்துவர் ஆனால் இவ்வாறு ஏன் செய்கின்றாய் எனக்கேட்ட பொழுது..நான் சொன்னால் அவர்கள் உணர மாட்டார்கள்.மேலும் இந்த மருத்துவர் சரியில்லை என எல்லாரிடமும் சொல்ல வாய்ப்பு உண்டு எனக்கு வரும் நோயாளிகளை குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என தெளிவாகக் கூறினார் என்று சொன்ன போது என்ன சொல்வது எனத்தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
இவர்களிடம் கற்றல் குறைபாடு 80%,அறிவுத்திறன் குறைபாடு 20% இருக்கும் சிலருக்கு அளவு வேறுபடலாம்.
முதல் படி 
3 மாதம் முதல் ஒண்ணரை வயதுக்குள்
வளர்ச்சியில் பின் தங்கிய குழந்தைகளாக இருப்பார்கள்..பெற்றோருக்கு இவ்வறிவு இருப்பின் எளிதில் கண்டு பிடித்து தொடர் பயிற்சியினால் இக்குறைப்பாட்டை போக்கி ,நடத்தையில் மாற்றத்தைக்கொண்டுவந்து விடலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அம்மாவிற்கு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற அறிவை, பொறுப்பை கல்வியோ,சமூகமோ கற்றுத்தருவதில்லை என்பதே வேதனையான உண்மை.
இரண்டாம் படி 
மூன்று வயதிற்குள் கண்டு பிடித்தால் இவர்களுக்கென உள்ள சிறப்பு பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்து 80% குறைப்பாட்டை நீக்கி, அவர்களை சாதாரண பள்ளியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. 
நரம்பு மண்டல ஒருங்கிணைப்பில் ஏற்படும் தாமதமே இவர்களுக்கு குறைபாடாகும்.

5 வயதிற்குள்  தூண்டப்படும் நியூரான்களே கற்றலுக்கு பயன்படுகின்றன.
8 வயதிற்கு மேல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறைபாட்டைக்காண்கையில் அவர்கள் நிரந்தரமான ஆட்டிசக்குழந்தையாகவே மாறிவிடுகின்றனர்.அவர்களின் குறைபாட்டை களையும் காலம் முடிந்துவிடுகின்றது..

மொழிதான் கல்வியின் ஆதாரமாக உள்ளது.குழந்தை தான் கற்றதை வெளிப்படுத்தினால் மட்டுமே கற்றல் நிகழ்ந்துள்ளது என்று பொருள்...ஆனால் இக்கால குழந்தைகளில் கற்ற என்பது மிகவும் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.மனப்பாடம் செய்யவே பயிற்றுவிக்கப்படுகின்றார்களே ஒழிய அவர்கள் கற்றதைப்பயன் படுத்தி தானாக செய்யும் அறிவைப்பெறுவதில்லை என்பதே உண்மை என்று கூறிய போது வீதியே உறைந்து நின்றது..

ஒரு குழந்தை எப்படி வளரும்?எப்படி வளர்க்க வேண்டும் என்பதை யாரும் கற்றுக்கொடுக்கவில்லை...பின் எவ்வாறு இப்படிப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு குணப்படுத்துவது..


அவர் பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தயாராக உள்ளார்..பள்ளிகள் அவரைப்பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதில் ஐயமில்லை
அவரின் பேச்சு அனைவருக்கும் விழிப்புணர்வை தந்ததுள்ளது...இத்தனைக்கூட்டங்களை விட மிகச்சிறப்பான வீதியாக இவ்வீதி அமைந்தது.

வீதிக்கூட்டத்திற்கு திருச்சியிலிருந்து சமூக ஆர்வலர் வில்வம்,காரைக்குடியிலிருந்து முனைவர் கண்மணி மற்றும் கவிஞர் ம.கு. வைகறை,ஆசிரியர் மா.தவமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றியுரை
கவிஞர் கீதா அனைவருக்கும் நன்றி கூற வீதி சிறப்புடம் முடிந்தது.

இம்மாதக்கூட்டத்தை சிறப்பாக நடத்திய அமைப்பாளர்கள் கீதா மற்றும் பாலாஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.




Thursday, 24 November 2016

Tuesday, 25 October 2016

வீதி கலைஇலக்கியக்களம் -32

                                     வீதி கலைஇலக்கியக்களம் -32

இன்று 23.10.16 வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக திருநங்கையர்களுக்கான சிறப்புக்கூட்டமாக நடந்தது.

வரவேற்புரை

ஒளிப்பதிவாளர் செல்வா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்க கூட்டம் துவங்கியது .

தலைமை


திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமை வகித்து கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்தி திருநங்கைகள் குறித்த கவிதை வாசித்தார்.


சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்களாக பாண்டிச்சேரியிலிருந்து திருமிகு செல்வக்குமாரி அவர்களும்,மதுரையிலிருந்து திருமிகு பிரியாபாபு அவர்களும் கலந்து கொண்டனர்.
உணர்வுபூர்வமான ஒரு விழாவாக அமைந்தது .

Saturday, 22 October 2016

வீதி கலை இலக்கியக்களம் 32

வீதி கலை இலக்கியக்களம்

அன்புடன் அழைக்கின்றோம்...

இம்மாதச் சிறப்பு-திருநங்கைகளுக்கான வீதி...

”பாலின சமத்துவ வீதி”யாக நாளை புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் ..காலை 9.30 மணி அளவில்...

வேறு உலகத்தினரோ? என நினைத்தவர்கள் ஆனால் இன்று என் பெரு மதிப்பிற்குரியவர்கள்.

சிறு வயதில் அப்படித்தான் நினைத்தேன்...அவர்களை மோசமாக திரைப்படங்களில் காட்டிய போது ..ஏதோ ஒன்று அவர்களிடமிருந்து விலக்கியது....

ஒடுக்கப்பட்டவர்களில் கீழ்சாதி மக்கள்..அவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற எனது கருத்தை மாற்றி பெண்களை விட ஒடுக்கப்பட்டவர்களாக மாற்று பாலினத்தவர்கள் இருப்பதைக்காட்டியது...

”லிவிங் ஸ்மைல் வித்யா “என்ற நூல்..முதன் முதலாக அவர்களை நேசிக்க ஆரம்பித்த கணம் அது.அந்நூலை எழுதிய சரவணன் அலைஸ் வித்யா அவர்களிடம் பேசும் வாய்ப்பு தம்பி வி.சி. வில்வம் மூலம் கிடைத்தது.வாழ்வில் முதன் முதலாக தன்பால் மாறிய சகோதரியிடம் பேசிய போது மனம் பிரமித்தது.

அவர்களின் வலியை உணர்ந்து அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் தொடர்வண்டியில் அவர்கள் விழுப்புரம் பகுதியில் ஏறுகையில் ,புதுகையில் பார்க்கையில் அவர்களின் கை பிடித்து உங்களை நான் நேசிக்கின்றேன் சகோதரி என சொல்லத் தோணும்.

ஒரு நாள் புதுகை செல்வா சார் அலைபேசியில் அழைத்து நீங்க வர அலுவலகம் வர முடியுமா எனக்கேட்டார்.அங்கு சென்ற போது எனது முகநூல் நண்பரும் ,நான் ஆவலுடன் சந்திக்க விரும்பிய எனது தோழி Priya Babu அவர்கள் வந்திருந்தார்கள்...மனம் நிறைய அன்புடன் அவர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.சங்க இலக்கியத்தில் அவரது புலமை வியக்கத்தக்க ஒன்று.

அவரின் தேடல் மிக விரிவான ,ஆழமான ஒன்று..தன்னை போன்றவர்களுக்காக அவர்களின் மதிப்பை மற்றவர்களுக்கு உணர்த்தும் மாபெரும் தேடுதலில்..உள்ளார்.
எப்போதும் புதுமையாக வித்தியாசமாக யோசிக்கக்கூடிய Selva Kumar& புதுகை செல்வா இருவரும் இம்மாத வீதிக்கூட்டத்தின் அமைப்பாளர்கள்..அவர்களால் நாளை ”பாலின சமத்துவ வீதி”யாக பொலிவு பெற உள்ளது...

வீதி கலை இலக்கியக்களம் மனித நேயத்துடன் வளர்கின்றது..அனைவருக்கும் மதிப்பளித்து ,மதிக்க கூடிய களமாக வீதி செயல் படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக வீதி நாளை திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான முழு வீதியாக செயல் பட உள்ளது..

அன்புடன் அனைவரையும் வீதியின் சார்பாக அழைக்கின்றோம்...

உங்களின் அன்பை அவர்கள் பெற்றுச்செல்ல வருவீங்க தானே....