Sunday 15 March 2015

வீதி மார்ச் மாதக் கூட்டம்

வீதி கலை இலக்கியக் களத்தின் மார்ச் மாதக் கூட்டம் 15/03/2015 அன்று ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமைப் பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். நா. அருள் முருகன் ஏற்று நடத்தினார்.

கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களின் முன்னிலையில் கூட்டம் துவங்கியது. கவிஞர். மாலதி அவர்கள் வரவேற்பு வழங்க முதல் நிகழ்வாக கவிஞர் பவல்ராஜ் அவர்கள் குறுங்கவிதைகளை வாசித்தார். கவிதையை மட்டும் வாசிக்காமல்  அவை பிறந்த சூழலையும் சுவைபடக் கூறினார். சில சூழல்கள் அவையோரின் விழிகளை நிறைத்தன. நிகழ்வின் சிறப்பான பங்களிப்புகளில் ஒன்றாக இருந்தது இது.

கவிஞர் ரேவதி அவர்கள் சிறுகதைகளை படித்து அவற்றை விவரித்து சிறந்த கதைகளை அறிமுகம் செய்தார். பூனை சுரண்டும் சுவர் அனைவரின் மனதையும் சுரண்டியது.

அடுத்ததாக கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிப்பை தொடர்ந்து மாணவர் அறிமுகத்தில் மாணவர் நடராசன் இணையவள் என்கிற கவிதையை வாசிக்க அவையோர் சிறந்த முறையில் கருத்தினை பதிவு செய்தார்கள். தொடர்ந்தது நடராசன் ஏற்புரை.

தொடர்ந்து கஸ்தூரி ரெங்கன் ஜே.ஆர். ஆர். டால்கீன் குறித்த தகவல்களை அவையினருடன் பகிர்ந்துகொண்டார்.

சிறுகதை எழுத்தாளர் திரு.சுரேஷ் மான்யா அவர்கள் அவஸ்தை என்கிற யூ.ஆர். அனந்தமூர்த்தியின் நாவலை விரிவாக அறிமுகம் செய்தார்.

கவிஞர் வைகறை விழாவின் நன்றியுரையைத்தர விழா இனிதே நிறைவடைந்தது.

விழாவிற்கு முதன் முதலாக புதுகை கவி மன்றத்தின் நிறுவனர் திரு. நிலவை பழனியப்பன் வருகை தந்திருந்தார். பல்வேறு பணிகளுக்கிடையே இந்நிகழ்வினில் பங்கேற்று சிறப்பித்தனர் ஆன்றோர்கள்.

விழாவின் ஏற்பாடுகளை திரு.சுரேஷ் மான்யாவும் திரு.கஸ்தூரி ரெங்கனும் செய்திருந்தனர். மிகவும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட இக்கூட்டத்தில் சான்றோர் பலரும் வியப்புறும் வண்ணம் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பை இதழ் சரவணக்குமார், மூ.தூயன் போன்றோர் முதன் முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் தங்களது இருப்பை அழுத்தமாக பதிவு செய்தனர்.

கவிஞர் ரமா ராமநாதன், தீக்கதிர். மதியழகன், முனைவர். துரைக்குமரன், தனது முக்கியப் பணிகளை துறந்து விட்டு வந்த குருநாத சுந்தரம், மரியாதை நிரம்பிய புலவர். கஸ்தூரி நாதன், மாவட்டத்தின் ஆங்கில ஆசிரியர் அந்தோணி, பாண்டியன் புத்தக அகம் திரு.முத்துப்பாண்டியன் உட்பட பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

வழக்கம்போலவே கவிஞர் கீதா, கவிஞர் மாலதி மற்றும் கவிஞர் நீலாஅவர்களும் விழாவின் நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தனர்.  

மாணவர் அறிமுகம்

வீதி மார்ச் மாத கூட்டத்தில் மாணவர் அறிமுகம் பகுதியில் செல்வன். ச. நடராசன் வீதிக்கூட்டதிற்காக எழுதி வாசித்த கவிதை.

இணையவள்

என் ஈரேழு அகவையில் நான்
அவளைக் கண்டேண்
இன்றோ இரண்டு வயதுக் குழந்தை
அவளுடன் கட்டிப் புரள்கிறது
எண்பதும் கூட மயங்கிப் போனது
அவளது அறிவழகில்
இன்றைய நவீன உலகில் எவரும்
அவளை விலக்குவதற்கில்லை
எங்கோவொரு மூலையில் என்ன நடந்தாலும்
நமக்கு சொல்கிற அவள்
எங்கோ யாரோ ஒருவரின் பிறந்தநாளுக்கு
வாழ்த்தத் தூண்டும் அவள்
இங்கே நம் உறவு அன்பிற்கு
ஏங்குவதை மறைக்கிறாள்
அரவிந்தன் உனக்குள் அதிகம் தேடப்பட்டான்
பின் அதிகம் சாடப்பட்டான் - பிறகு
தாயகம் தவறினும் தலைநகரம் பிடித்த
அரவிந்தனை கொண்டாடினாள்
~அவளை~ப் போன்றே அவளையும் புரிந்து
கொள்ளவே முடியவில்லை
அவள் மட்டும் இல்லையெனில கொடிகட்டிப்                                
பறந்திருப்பர் சினிமாக்காரர்கள்
சினிமாக் காரர்களை சின்னாபின்னாவென ஆக்கியவள்
சீரழிப்பாளோ சிடுஹெச்சையும
அவளைக் குறைசொல்லவில்லை பலருக்கு வாழ்வளிப்பவள்
வாழ்வழிக்கவும் செய்கிறாள்
~அவள்~ அவளால் அசிங்கப்படுத்தப் படுகிறாள்
ஆண்களின் துணையொடு
~அவளின்~ ஆயுதம் இருகைகள் ஒன்று
புன்னகை மற்றொன்று அழுகை
ஆனால் அவளுக்கோ மூன்று ஆயுதம்
இரு கை ஒரு மூளை
இதுவரை இவ்வுலகு உயரக் காரணமானவள்
இனி அழியவும் காரணமாகலாம்
கட்டிளங் காளையாய் இருந்த இளைஞனை
கட்டுக்குள் வைத்துவிட்டாள்
அதுபோதாதென்று அவனுக்கு பெயரும் வைத்தாள்
அவள் அடிமை என்று
இளைஞன் சமூகவலைதளத்தில் இருக்கும் நேரத்தைவிட
சமூகத்தில் இருப்பது குறைவு
காணவில்லை இளைஞனை காரணம் அவளின்
விரைவான செயலின் வசீகரம்
பிரம்மனின் படைப்பு பெர்னெர்ஸ் லீயின் படைப்பினுள்
மூழ்கிப் போனதோ
அவள் இருபக்க ஆயுதம் கூராக்கவும்
செய்வாள் மழுக்கவும் செய்வாள்
மனிதன் அவளை பயன்படுத்துவதில் இருக்கிறது
கூராகுதலும் மழுங்குதலும்
அனைத்து விஷயங்களையும் அவள் அறிகினும்
அவள் அறியவேண்டியது பல
என்னதான் அவள் மனிதனை விஞ்சினாலும்
அவளைப் படைத்தது மனிதனே.

ச. நடராசன்
இயந்திரவியல் இரண்டாம் ஆண்டு
சுதர்சன் பொறியியல் கல்லூரி

புதுக்கோட்டை