Saturday 16 August 2014

வீதி கலை இலக்கியக் களம்-சூன் மாதக் கூட்ட அறிக்கை


வீதி கலை இலக்கியக் களம்-சூன் மாதக் கூட்டம்
-----------------------------------------------
29.06.14 அன்று வழக்கம் போல் ஆக்ஸ்போர்ட் உணவகக்கலைக் கல்லூரியில் மிகச் சிறப்புடன் நடந்தது.
இம்மாத கூட்ட அமைப்பாளர்கள் என் தோழியும் உதவிக்கல்வி அலுவலருமான திருமிகு.ஜெயலெக்‌ஷ்மியும்,திருமிகு.வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்களும் .
மிக பரபரப்பாக கூட்டத்தை மிகச் சிறப்பாய் நடத்த வேண்டுமென திட்டமிட்டு நினைத்தபடியே மிகமிகச் சிறப்பாய் முடித்தார்கள் .
நுழையும் முன்னே நெல்லிக்கனி தந்து அதியமானாய் ஆகி,அழகாக வரவேற்றார் ஜெயலெக்‌ஷ்மி ,தலைமையாக முன்னாள் பேராசிரியர் துரைபாண்டியன் அவர்கள் .தமிழ் அருவியாய் கொட்டியது அவரிடமிருந்து.அவர் மகளிடம் உங்க அப்பாகிட்ட பாடம் படிக்கலயேன்னு கவலை வருதுன்னேன்.

முந்தையக் கூட்ட அறிக்கையை வள்ளிக்கண்ணு அவர்கள் வாசித்தார்.
கவிதைகளால் கலக்கினர் தமிழ்ச்செல்வன்,செல்லத்துரை,ரேவதி மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல்
தமிழ்ச்செல்வனின் வரிகளாய்..
       ” எந்திரம் உலவும் பூமி
         இதயமும் இல்லை சாமி
          ......பந்தமோ சிறிதும் இல்லை
                பசித்தவர் இரும்பை உண்பார்...”
என தொலைந்து போன மனித நேயத்தைச் சாட
அடுத்துவந்த செல்லத்துரையோ
              ஜென் துறவி,இரவைத்தேடி,நிலவைப் பின் தொடர்பவன்,வந்தது யார் என கவிச்சரம் தொடுத்தார்...
                 ” ஒளிரும் சூரியன் கூட
                   தோற்றே போகிறது
                     இரவிடம்...”
என்றவரைத் தொடர்ந்து வந்த ரேவதியோ

தலைவிதி,காதலிக்க ஒருவன் என முழங்கினார்
   ” உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்
    காதல்வரின் கவலைகள் மெய்விட்டோடுமா?”
என்பதுடன் கல் உடைக்கும் சிறுமியின் என்ணங்களை வார்த்தை சரமெடுத்துச் சாடுகிறார்.......

நூல் அறிமுகமும்,விமர்சனமுமாய்...புத்தகப்பிரியை ராகசூர்யா முகிலின் நாவலை கொஞ்சும் மழலைத் தமிழில் அழகாக அறிமுகம் செய்தார்.விரிந்த அவரது பார்வையில் நூலின் சிறப்புகள் அனைத்தும் அருமையாக விளக்கினார்.

சுரேஷ்மான்யாவின் சிறுகதை-தாமரை
வாசித்த நிமிடங்களில் எங்களை கதைக்குள் கொண்டு செல்லும் திறனுடன்....உவமையாக தாமரை என்ற பெண்ணை வர்ணிக்கையில்

“என்ன ஒரு பனைமர அழகு,நெடுநெடுவென வானம் தொடுறாப்புல.குச்சியில கொடிசுத்தி பூ பூக்குறாப்புல என்ன அழகா வர்றா!அழகு மீனாட்சியே நேர்ல வர்றாப்புல ...”

தெய்வீக அழகை அவர் அந்த பெண்ணின் அழகை வர்ணிப்பதை

கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அவர்கள் பிரம்ம பிரேமம் என்ற வார்த்தையினால் விமர்சித்து,அழகிய நனவோடை உத்தியைக் கையாண்டு லா.ச.ரா.வின் அபிதாவின் நாவலுக்கிணையான நாவலைப்படைத்துள்ளதாகக் கூறினார்.

கவிஞர் சுவாதியால் அறிமுகம் செய்யப்பட்ட பஷீர் அலி அவர்கள் பழங்கால நாணயங்களைப்பற்றி அறியச் செய்திகளைக்கூறி வியப்பில் ஆழ்த்தினார்.

தேர்ந்தெடுத்த உலகசினிமாக்களை புதுகைக்கு அறிமுகம் செய்யக்கூடிய இளங்கோ அவர்கள்.
பிரேசில் நாட்டுப்படம் பற்றிய அருமையாகக் கூறிய விதம், திரைப்படத்தை நேரில் காணும் ஆவலைத்தூண்டியது.

கோதுமைப்பால் சுடச்சுட தந்து ,இனிப்பு காரம் பிஸ்கட் நிறைந்த பையில் இறையன்புவின் சிற்பங்களைச் சிதைக்கலாமா?புத்தகத்தையும் அளித்து அன்பால் திக்குமுக்காட வைத்துவிட்டார் என் தோழி .......மகிழ்வுடன் எல்லோருக்கும் தரணும் என்ற மனநிறைவோடும் அவர் அமைத்த இம்மாதக்கூட்டம்,கஸ்தூரிநாதன் அவர்கள் நன்றிகூற இனிதாய் முடிந்தது